Page Loader
திமுக முன்னாள் எம்பி மஸ்தானின் மரணம் இயற்கையல்ல ஒரு கொலை!
திமுக முன்னாள் எம்பி கே.எஸ்.மஸ்தான்(படம்: The Indian Express)

திமுக முன்னாள் எம்பி மஸ்தானின் மரணம் இயற்கையல்ல ஒரு கொலை!

எழுதியவர் Sindhuja SM
Dec 31, 2022
04:14 pm

செய்தி முன்னோட்டம்

முன்னாள் எம்பி கே.எஸ்.மஸ்தான் மரணமடைந்து கிட்டத்தட்ட 10 நாட்களுக்குப் பிறகு, அவரது மரணம் இயற்கையல்ல கொலை என்பதைக் காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து, இதில் சம்பந்தப்பட்ட நான்கு பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர். டிசம்பர் 22ஆம் தேதி, மஸ்தான் திருச்சிக்கு பயணம் செய்து கொண்டிருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டார் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் இறந்த உடனேயே, அவரது மகன், சந்தேகத்தின் அடிப்படையில் கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சந்தேக மரணம் என எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளிப்புற காயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால் சந்தேக நபர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

30 Dec 2022

விசாரணையில் திருப்புமுனை!

மஸ்தானுக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலருடன் நிதிப் பிரச்சனை இருந்ததாகவும், அதுவே அவரது கொலைக்கு காரணமாக இருந்திருக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்தனர். "சில ஆண்டுகளுக்கு முன் அவர்கள் மஸ்தானுக்குக் கொடுத்த பணத்தைக் கேட்டு அவரைத் தாக்கியுள்ளனர். அவர் மயங்கி விழுந்ததால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது" என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவி வருகிறது. மஸ்தான் கொலையில் தொடர்புடைய இம்ரான், சுல்தான், நசீர், தௌபீக் மற்றும் டிரைவர் லோகேஷ் ஆகியோரை கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணைக்குப் பின், மஸ்தானுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக, மஸ்தானின் டிரைவர் நாடகம் நடத்தியது போலீசாருக்கு தெரியவந்தது.