காரைக்குடி திரையரங்கு கேன்டீனில் பப்ஸ் சாப்பிடும் பூனை - உணவு விற்பனைக்கு தடை
தமிழ்நாடு, காரைக்குடி நகராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள், உணவகங்கள், சாலையோர உணவுக்கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. இங்கு பாதுகாப்பான உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், சில கடைகளில் பாதுகாப்பற்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய உணவு வகைகள் விற்கப்படுகிறது. இதனை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொள்ளவேண்டும். ஆனால் அவர்கள் மக்கள் புகாரளித்தால் மட்டுமே ஆய்வு மேற்கொள்கிறார்கள் என்னும் குற்றச்சாட்டு முன்னதாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் காரைக்குடியிலுள்ள திரையரங்கு கேன்டீனில் பூனை ஒன்று பப்ஸ் சாப்பிடும் வீடியோ இணையத்தில் பரவியது. இதனை கண்டு பலரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ பரவியதையடுத்து, அங்கு ஆய்வுச்செய்த அதிகாரிகள் தற்போது உணவுகளை விற்க தடை விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.