மதுரையில் அதிமுக எழுச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி
மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு இன்று தொடங்கியது. கட்சி கொடியை ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி. அவர் கட்சி கொடியை ஏற்றும் போது, ஹெலிகாப்டர் மூலம் ஆயிரம் கிலோ ரோஜா மலர்கள் அவர் மீது தூவப்பட்டன. அதிமுக எழுச்சி மாநாட்டை வழி நடத்துவதற்கு அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு சென்றுள்ள நிலையில், அவருக்கு தொண்டர்கள் அமோக வரவேற்பு அளித்தனர். அதிமுகவின் பொன்விழாவை கொண்டாடுவதற்காக மதுரையில் உள்ள வலையங்குளம் பகுதியில் அதிமுகவின் பொன்விழா வீர வரலாற்று எழுச்சி மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டிற்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக 10 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
51 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றிய எடப்பாடி பழனிச்சாமி
இந்த பார்க்கிங்ளில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டிற்காக வலையங்குளம் பகுதியில் உள்ள மாநாட்டு திடலில் 51 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த மாபெரும் கொடிக்கம்பத்தில் 8 அடி நீளம், 16 அடி அகலம் கொண்ட அதிமுக கொடியை இன்று எடப்பாடி பழனிசாமி ஏற்றினார். அவர் கொடியை ஏற்றியதும், ஆயிரம் கிலோ ரோஜா மலர்கள் அவர் மீது தூவப்பட்டன. அதன் பிறகு, அவர் சமாதான புறாக்களை மாநாட்டு திடலில் பறக்கவிட்டார். இன்று மாலை, எடப்பாடி பழனிசாமி மீண்டும் மாநாட்டிற்கு வரும் போது இதே போன்ற ரோஜா மலர்கள் தூவப்படும் என்று கூறப்படுகியது.