கொடைக்கானலில் பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் செய்த காங்கிரஸ் பிரமுகர் கைது
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் அப்துல் கனிராஜா(50). கொடைக்கானல் நாயுடுபுரத்தினை சேர்ந்த இவருக்கு அப்பகுதியில் சொந்தமான தங்கும்விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. கொடைக்கானல் ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் ரிசார்ட்ஸ் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். இவருக்கு தெரிந்த முக்கியமானவர்களுக்கு கொடைக்கானலிலுள்ள இடங்களை வாங்கிக்கொடுப்பது, விற்பனைச்செய்வது போன்ற தொழிலையும் இவர் செய்துவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்னர் தென்சென்னையிலிருந்து காங்கிரஸ் கட்சியினை சேர்ந்த முக்கிய பிரமுகர் ராஜசேகர் தனது குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றுள்ளநிலையில் அங்கு அப்துல் கனிராஜாவிற்கு சொந்தமான தங்கும் விடுதியில் தங்கியுள்ளார். தொடர்ந்து ராஜசேகரும் அவரது குடும்பத்தினரும் சுற்றுலா இடங்களுக்கு சென்ற நிலையில், ராஜசேகரின் உறவினரான 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மட்டும் அறையில் இருந்ததாக கூறப்படுகிறது.
நெஞ்சு வலி என்று கூறி காவல்நிலையத்தில் மயங்கி விழுந்த அப்துல் கனிராஜா
தனிமையில் இருந்த அப்பெண்ணின் அறைக்குள் சென்ற அப்துல்கனிராஜா அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அப்பெண் கனிராஜா மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதனைத்தொடர்ந்து அவர்மீது இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் வழக்குப்பதிவு செய்து நேற்று(மே.,9)அப்துல் கனிராஜாவிடம் காவல்நிலையத்தில் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது அவர் நெஞ்சுவலி என்றுக்கூறி மயக்கமிட்டுள்ளார். அதனால் அவரை போலீசார் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்ததையடுத்து அவருக்கு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அதன்பின்னர் அவரை அங்கிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச்சென்ற பொழுது அவரது உறவினர்கள் அதனை தடுத்து நிறுத்த முயன்றுள்ளார்கள். அப்போது ஏ.டி.எஸ்.பி. சந்திரன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் கனிராஜா நீதிமன்றத்தில் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்பேரில் அவரை 15 நாட்கள் காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காலவரிசையைப் பகிரவும்