கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதற்காக கடத்திய பேராசிரியை கணவர் கைது
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததில் பேராசிரியையின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் சூலூர் சுற்று வட்டாரத்தில் உள்ள கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக அண்மையில் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் ரோந்து பணியினை தீவிரப்படுத்தினர். அதன்படி, சிந்தாமணி புதூர் அருகே திருச்சி சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது சந்தேகம் அளிக்கும் விதத்தில் தோளில் ஒரு பையினை மாட்டிக்கொண்டு நின்றிருந்தவரை பார்த்த போலீசார் அவரை அழைத்து விசாரித்துள்ளார்கள். அப்போது அந்த நபர் போலீசிடம், நான் டாக்டரேட் பட்டம் பெற்றவன். என்னையே சந்தேகப்படுகிறீர்களா?என்று கேள்வி எழுப்பி விசாரணைக்கு ஒத்துழைக்காமல் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.
1200 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்
இதனால் மேலும் அந்த நபர் மீது சந்தேகமுற்ற போலீசார் அவரை சோதனையிட்டனர். அப்போது அவரின் லுங்கியில் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்த சென்றுள்ளனர். அங்கு வைத்து போலீசார் அவரிடம் விசாரித்ததில், அவர் ஆனைக்கட்டி பகுதியினை சேர்ந்த மனோஜ்குமார்(45) என்பதும், எம்சிஏ பட்டம் பெற்றவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அதிகம் படித்த இவர் அந்த சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 1200 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவரது மனைவி கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காலவரிசையைப் பகிரவும்