Page Loader
நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் படியில் பயணம் செய்ய ஏற்பட்ட மோதல் - 2 பேர் பலி 
நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் படியில் பயணம் செய்ய ஏற்பட்ட மோதல் - 2 பேர் பலி

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் படியில் பயணம் செய்ய ஏற்பட்ட மோதல் - 2 பேர் பலி 

எழுதியவர் Nivetha P
Jul 16, 2023
02:21 pm

செய்தி முன்னோட்டம்

கோவை மாநகரில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலானது இன்று(ஜூலை.,16) காலை புறப்பட்டு சென்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாக காணப்பட்ட நிலையில், குற்றாலம் செல்லும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோரும் அதில் பயணித்துள்ளனர். இதனால் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் நின்றவாறும், படிகளில் தொங்கியவாறும் பலர் பயணித்து கொண்டிருந்துள்ளனர் என்று தெரிகிறது. ரயிலானது மதுரையினை கடந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருக்கும் பொழுது, படியில் அமர்ந்து பயணம் செய்வதில் தூத்துகுடியினை சேர்ந்த மாரியப்பன்(36) என்பவருக்கும், தென்காசியினை சேர்ந்த முத்துகிருஷ்ணன்(32) என்பவருக்கும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்த சக பயணிகள் அவர்களை கண்டித்து உள்ளே வருமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்து வந்துள்ளனர்.

ரயில் 

ஒருவர் பின் ஒருவராக படியில் இருந்து தவறி விழுந்த வாலிபர்கள் 

குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் இருவரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டுள்ளனர். விருதுநகர் தாண்டி ஆர்.ஆர்.நகர் பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக செல்கையில் தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் ஒருவர் பின் ஒருவராக படியிலிருந்து தவறி கீழே விழுந்தனர். அதில் ஒருவர் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்றொருவர் உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளார். இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்தவரை காவல்துறையினர் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர்களது உடல் தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்வே காவல்துறை இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.