LOADING...
ஆபரேஷன் சிந்தூர் ஏன் அதிகாலை 1 மணிக்கு நடத்தப்பட்டது?- முப்படை தளபதி அனில் சவுகான் விளக்கம்
மிக முக்கியமான காரணம், பொதுமக்கள் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதுதான்

ஆபரேஷன் சிந்தூர் ஏன் அதிகாலை 1 மணிக்கு நடத்தப்பட்டது?- முப்படை தளபதி அனில் சவுகான் விளக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 19, 2025
03:54 pm

செய்தி முன்னோட்டம்

CDS ஜெனரல் அனில் சௌகான், 'ஆபரேஷன் சிந்தூர்' அதிகாலை நேரத்தில் திட்டமிடப்பட்டதற்கான காரணங்களை விளக்கியுள்ளார். சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசிய ஜெனரல், இந்தத் தாக்குதல் அதிகாலை 1 மணி-1:30 மணிக்குள் நடத்தப்பட்டதற்கான இரண்டு முக்கிய காரணங்களை எடுத்துரைத்தார். மிக முக்கியமான காரணம், பொதுமக்கள் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதுதான். ராணுவ ரீதியாக, அதிகாலை 5:30 அல்லது 6 மணி என்பது தாக்குதலுக்கு உகந்த நேரமாக இருந்திருக்கும் என்று ஜெனரல் சௌகான் குறிப்பிட்டார். ஆனால், அந்த நேரம் முதல் 'அஸான்' எனப்படும் இஸ்லாமியர்களின் தொழுகை அழைப்பு நேரம். பஹாவல்பூர் மற்றும் முரிட்கே போன்ற பகுதிகளில் பொதுமக்கள் பலர் வெளியே இருப்பார்கள். இந்திய ஆயுதப் படைகள் எந்த விதத்திலும் பொதுமக்கள் உயிர் சேதத்தை விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார்.

நம்பிக்கை

இந்தியாவின் தொழில்நுட்பத்தின் மீதுள்ள நம்பிக்கை

இந்தத் தாக்குதலின் நேரம், இரவின் இருளிலும் தாக்குதலை நடத்தி, அதற்கான ஆதாரங்களைச் சேகரிக்கும் ராணுவத்தின் மேம்பட்ட திறனைப் பிரதிபலித்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 2019-இல் நடந்த பாலகோட் வான்வழித் தாக்குதலின்போது செயற்கைக்கோள் படங்களையோ, புகைப்படங்களையோ சேகரிப்பது கடினமாக இருந்தது. ஆனால், 'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றி பெற்றது, ட்ரோன்கள் மற்றும் செயற்கைக்கோள் உளவு போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களால் இயக்கப்படும் "புதிய வகையான போரை" நிரூபித்துள்ளது என்று அவர் கூறினார். இந்த நடவடிக்கை, நிலம், வான், கடல், மின்னணுவியல் மற்றும் சைபர் எனப் பல களங்களில் நடத்தப்பட்ட ஒரு கூட்டு நடவடிக்கையாகும் என்றும், அதன் வெற்றி எதிரி பிரதேசத்தைக் கைப்பற்றுவதன் மூலம் அல்லாமல், தாக்குதலின் துல்லியமான நுட்பத்தினால் தீர்மானிக்கப்பட்டது என்றும் வலியுறுத்தினார்.