Page Loader
விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது

விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது

எழுதியவர் Sindhuja SM
Jul 02, 2024
12:01 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில(ஐஓபி) 180 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் (என்பிடபிள்யூ) பிறப்பித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ), தற்போது செயல்படாத கிங்பிஷர் ஏர்லைன்ஸின் விளம்பரதாரரான மல்லையா, "வேண்டுமென்றே" பணம் செலுத்தத் தவறியதால், ஐஓபிக்கு ரூ.180 கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டது என்று குற்றம் சாட்டியுள்ளது. பணமோசடி வழக்கில் தப்பியோடிய பொருளாதார குற்றவாளி என்று ஏற்கனவே அமலாக்க இயக்குநரகம்(ED) அவரது பெயரை அறிவித்துள்ள நிலையில், தற்போது விஜய் மல்லையா லண்டனில் வசித்து வருகிறார். அவரை நாடு கடத்த இந்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது.

இந்தியா 

மல்லையா மீது கடனை திருப்பி செலுத்தாத குற்றச்சாட்டுகள்

2007 மற்றும் 2012 க்கு இடையில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ், ஐஓபி வங்கியிடம் இருந்து பெற்ற கடனை திருப்பி தராமல் மோசடி செய்த மல்லையாவுக்கு எதிராக தற்போது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், மல்லையா "வேண்டுமென்றே" கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதாகவும், கடனைத் திருப்பிச் செலுத்தாததால் ரூ.141.91 கோடி தவறான இழப்பு ஏற்பட்டதாகவும் கூறுகிறது. அவரது கடன்களை அவர் பங்குகளாக மாற்றியதால் ரூ.38.30 கோடி கூடுதல் தவறான இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, மல்லையா மற்றும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கு எதிராக வெளிவர முடியாத வாரண்ட் (என்பிடபிள்யூ) பிறப்பிக்கப்பட்டுள்ளது.