
சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல்!
செய்தி முன்னோட்டம்
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளை உட்பட பல்வேறு முக்கிய இடங்களுக்கு இன்று ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டலைத் தொடர்ந்து, இரு நீதிமன்ற வளாகங்களிலும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற வளாகம் மற்றும் பிற முக்கிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, டிஜிபி அலுவலகத்திற்கு Email மூலம் இந்த மிரட்டல் வந்துள்ளது. இதேபோல, மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு, நீதிமன்றப் பதிவாளரின் மின்னஞ்சலுக்கு மிரட்டல் செய்தி வந்துள்ளது.
சோதனை
தீவிர சோதனையினால் வழக்கு விசாரணைகள் தொடங்குவதில் தாமதம்
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் (Bomb Disposal Squad) உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை தீவுத்திடலில் உள்ள ராணுவ அலுவலகத்திற்கும் இதேபோன்ற மிரட்டல் விடுக்கப்பட்டதால், அங்கும் சோதனை நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், மதுரை கிளையில் மிரட்டல் தகவல் கிடைத்தவுடன், நீதிமன்றப் பணியாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழுவினர் வளாகம் முழுவதும் சோதனையைத் தொடங்கியுள்ளனர். இந்த திடீர் மிரட்டல் காரணமாக, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்றைய வழக்கு விசாரணை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.