அரியலூர் மருத்துவ கல்லூரியில் திறக்கப்பட்ட அரங்கத்திற்கு மாணவி அனிதா பெயர் - முதல்வர் அறிவிப்பு
அரியலூர் மருத்துவ கல்லூரி கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது. இதில் 2 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. அதன் படி தற்போது இந்த கல்லூரியில் நவீன மருத்துவமனை கட்டப்பட்டு அம்மாவட்ட மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு போராட்டத்தில் தனது உயிரை மாய்த்துக்கொண்ட அனிதாவின் நினைவாக அரியலூர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் 22 கோடி செலவில் 850 பேர் அமரக்கூடிய வகையில் அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அனிதா நினைவு அரங்கம் என பெயர் சூட்டப்போவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இது குறித்த அறிக்கையினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் நீட் தேர்வு அறிவிப்பால் பறிபோன மாணவியின் உயிர்
அரியலூர் மாவட்ட குழுமூர் கிராமத்தில் ஏழை ஆதிதிராவிட குடும்பத்தில் பிறந்த கூலித்தொழிலாளியின் மகள் தான் அனிதா. டாக்டர் ஆகவேண்டும் என்னும் கனவில் தமிழ்வழி வாயிலாக கல்விப்பெற்று 12ம்வகுப்பு பொதுத்தேர்வில் 1200க்கு 1176மதிப்பெண்களை அனிதா பெற்றிருந்தார். ஆனால் மத்தியஅரசு 12ம்வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக எடுத்துகொள்ளாமல் நீட்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தான் மருத்துவ சேர்க்கை நடைபெறும் என கூறியதையடுத்து மனமுடைந்து போனார். ஏழை குடும்பத்தில் பிறந்த அவரால் விலையுயர்ந்த நீட்தேர்வு பயிற்சிகளை மேற்கொள்ளமுடியாது என்பதால், தன்னைப்போல கிராமங்களில் இருக்கும் ஏழை மாணவர்களால் நீட் தேர்வினை எதிர்கொள்ளமுடியாது என்றுகூறி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார். ஆனால் நீதிமன்றம் நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடக்கும் என்றுகூறி உத்தரவிட்டதால் அனிதா 2017 செப்டம்பரில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.