கேமிங் செயலி மூலம் சந்தித்த, ISIS மற்றும் அல்கொய்தா அமைப்புகளுடன் தொடர்புடைய 12 சந்தேக நபர்கள் கைது
செய்தி முன்னோட்டம்
பல மாநிலங்கள் இணைந்து நடத்திய நடவடிக்கையின் விளைவாக, இந்தியத் துணைக்கண்டத்தின் அல்-கொய்தா (AQIS) மற்றும் ஈராக், சிரியாவின் இஸ்லாமிய அரசு (ISIS) போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேசம் மற்றும் டெல்லி காவல்துறை இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன. சந்தேக நபர்கள், ஒரு கேமிங் செயலி மூலம் AQIS மற்றும் ISIS அமைப்புகளை சேர்ந்த வெளிநாட்டு நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
தீவிரமயமாக்கல் முயற்சிகள்
சந்தேக நபர்கள் 'Benex Com' என்றழைக்கப்பட்ட குழுவின் அங்கத்தினர்களாக இருந்தனர்
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 'பெனக்ஸ் காம்' என்ற குழுவுடன் அவர்களுக்குத் தொடர்பு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் சமூக ஊடகங்களில் இந்தியாவின் தேசியக் கொடியை ஐஎஸ்ஐஎஸ் கொடியாக மாற்றியதாகவும், தேசிய கீதத்தை கேலி செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அக்குழு இந்தியாவை ஒரு இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கு ஆதரவளித்ததோடு, பயிற்சி பெறுவதற்காக பாகிஸ்தானுக்குப் பயணிக்கவும் திட்டமிட்டிருந்தது.
நெட்வொர்க் வளர்ச்சி
ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த மூன்று சந்தேக நபர்கள் 'அல் மாலிக் இஸ்லாமிய இளைஞர்' அமைப்பை உருவாக்கினர்
ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த முகமது ரஹ்மத்துல்லா ஷரீஃப், மிர்சா சோஹைல் பேக் மற்றும் முகமது டேனிஷ் ஆகிய மூன்று சந்தேக நபர்களும், ஜிஹாதுக்காக இளைஞர்களை தீவிரமயப்படுத்தும் நோக்கில் 'அல் மாலிக் இஸ்லாமிய இளைஞர்' என்ற குழுவை உருவாக்கியதாக கூறப்படுகிறது. அவர்கள் வெவ்வேறு பிராந்தியங்களில் உள்ள செயல்பாட்டாளர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பல மாநிலங்களில் தங்கள் வலையமைப்பை விரிவுபடுத்தினர். இந்த மூவரும் , தீவிரவாதப் பிரச்சாரத்தில் ஈடுபடும்போது, தங்களை முஜாஹிதீன்களாக காட்டிக்கொண்டும், ஒசாமா பின்லேடனை போல நடித்துக் கொண்டும் காணொளிகளை பதிவிட்டனர்.
இணையவழி பிரச்சாரம்
அந்தக் குழு இளைஞர்களைப் பயிற்சி பெற ஊக்குவித்து வந்தது
பைக் டாக்சி ஓட்டுநரான ரஹ்மத்துல்லா, டேனிஷ் மற்றும் சோஹைல் பெக் ஆகியோருடன் சேர்ந்து, இணையதளங்கள் மூலம் ஜிஹாத் தொடர்பான நடவடிக்கைகளை விரிவுபடுத்தியதாகக் கூறப்படுகிறது. அவர் சமூக ஊடகங்கள் வழியாக அல்-ஹக்கீம் ஷுகூர் என்ற வெளிநாட்டு முகவருடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு, அவரது அறிவுறுத்தல்களின்படி மற்ற சந்தேக நபர்களுடன் இணைந்து செயல்பட்டார். மேலும், இந்தக் குழு இளைஞர்களை பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற ஊக்குவித்து வந்தது.