ஆர்.ஜே.பாலாஜி பொய்யாக அழுததாக கூறிய திருப்பூர் சுப்பிரமணியம்; பதிலடி கொடுத்த 'கருப்பு' படக்குழு
செய்தி முன்னோட்டம்
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியாகி உலகளவில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் அடித்துள்ள 'கருப்பு' திரைப்படம், தற்போது தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையிலான கடுமையான கருத்து மோதலால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் ரிலீஸ் தாமதம் மற்றும் நிதி நெருக்கடி குறித்துத் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் முன்வைத்த விமர்சனங்களுக்குப் படத்தைத் தயாரித்த டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளது.
சர்ச்சை
திருப்பூர் சுப்பிரமணியம் கிளப்பிய 'கண்ணீர்' சர்ச்சை
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய திருப்பூர் சுப்பிரமணியம், "கருப்பு திரைப்படம் ரிலீஸாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடிகளை நாங்கள்தான் முன்னின்று தீர்த்தோம்". "அந்த இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளருடன் நிற்க வேண்டிய இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி, பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல் தனது காரில் போய் உட்கார்ந்து கொண்டு அழுதபடி வீடியோ ரெக்கார்ட் செய்து கொண்டிருந்தார். ஆனால், படம் இப்போது மிகப்பெரிய வெற்றியடைந்ததும் காலரைத் தூக்கி விடுகிறார்" என்று கடுமையாகச் சாடியிருந்தார். மேலும், சூர்யா மட்டுமே கடைசி நேரத்தில் பணம் கொடுத்து உதவினார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஆதரவு
இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜிக்கு தயாரிப்பு நிறுவனம் முழு ஆதரவு
விநியோகஸ்தரின் இந்த விமர்சனத்திற்குப் பதிலளிக்கும் வகையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கருப்பு திரைப்படத்தின் இந்த பிரம்மாண்டமான வெற்றிப் பயணம் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் அவரது குழுவினர் இல்லாமல் சாத்தியமாகி இருக்காது". "ஒரு இயக்குனராகப் படத்தின் ஆன்மாவையும், அதன் பாசிட்டிவ் வைப்பையும் (Vibe) ஆரம்பம் முதல் இன்று வரை ஒற்றை ஆளாகத் தாங்கிப் பிடித்தவர் அவர்தான். அவருக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜிக்கு தங்களது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
நன்றி
"நிதிப் பொறுப்புகளுக்கு நாங்களே பொறுப்பு! சூர்யாவுக்கு நன்றி"
மேலும் அந்த அறிக்கையில், "திரைப்படம் தியேட்டருக்கு வர நிதியுதவி செய்த திருப்பூர் சுப்பிரமணியம், ஆர்.பி.சௌத்ரி உள்ளிட்ட அனைத்து ஃபைனான்சியர்களுக்கும் எங்கள் நன்றிகள். அதே நேரத்தில், படத்தின் வணிகம் மற்றும் நிதி சார்ந்த அனைத்து அம்சங்களுக்கும் தயாரிப்பு நிறுவனமான நாங்களே முழுப் பொறுப்பேற்கிறோம்" என்று கூறி, ஆர்.ஜே.பாலாஜி மீது சுமத்தப்பட்ட நிதிப் பொறுப்புக் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அத்துடன், இக்கட்டான சூழலில் தங்களுக்குப் பக்கபலமாக நின்ற நடிகர் சூர்யாவை 'தி ஒன்' (The One) எனக் குறிப்பிட்டுத் தங்களது நன்றியையும் படக்குழுவினர் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
With sincere gratitude to all our financiers, distributors, cast, crew and every individual who contributed to #Karuppu/#Veerabhadrudu. Thank you for your trust, support, and dedication. We are truly grateful. 🙏 pic.twitter.com/DaN8V2KkeJ
— DreamWarriorPictures (@DreamWarriorpic) June 16, 2026