உருவாகிறதா லலித் மோடியின் வாழ்க்கை வரலாறு படம்? ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்ட முன்னணி நடிகர் யார்?
செய்தி முன்னோட்டம்
இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரின் முன்னாள் ஆணையர் லலித் மோடி, தனது வாழ்க்கை மற்றும் ஐபிஎல் தொடரின் உருவாக்கம் குறித்து ஒரு பிரம்மாண்ட பயோபிக் தயாரிப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனமான ANI-க்கு அளித்த நேர்காணலில் இதனைப் பகிர்ந்த அவர், தற்போதைக்கு இந்தத் திரைப்படம் திரைக்கதை எழுதும் கட்டத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த கதைக்காக தான் ஏற்கனவே திரைக்கதை எழுத்தாளர்களுடன் நூற்றுக்கணக்கான மணிநேரங்கள் நேர்காணலில் அமர்ந்து பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரன்வீர் சிங்
ரன்வீர் சிங் காட்டினாரா ஆர்வம்?
இந்தத் திரைப்படத்தில் லலித் மோடி கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற கேள்விக்கு, பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் இதில் நடிக்க தனக்கு இருந்த விருப்பத்தை ஏற்கனவே தெரிவித்து இருந்ததாக லலித் மோடி வெளிப்படுத்தியுள்ளார். "ரன்வீர் சிங்கிற்கு என் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை. சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் லண்டனில் உள்ள எனது இல்லத்திற்கு நேரடியாக வந்து என்னைச் சந்தித்துப் பேசினார்" என்று லலித் மோடி நினைவுகூர்ந்துள்ளார். மேலும் அந்த சந்திப்பின் போது ரன்வீர் சிங், தன் திரையுலக வாழ்க்கையில் 'ஐபிஎல் கமிஷனராக லலித் மோடி' என்ற ஒரு கதாபாத்திரத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டதாக கூறியதை மோடி குறிப்பிட்டுள்ளார். "நானாக அவரிடம் கேட்கவில்லை, அவராகவே வந்து கேட்டார்" என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
பணி
திரைக்கதைக்கு பின்னால் ஒரு பெரும் குழு
இந்தத் திரைப்படத்தின் திரைக்கதை பணிகளைச் சோனி தொலைக்காட்சியின் முன்னாள் தலைவரான சினேகா ரஜானி தலைமையிலான ஒரு பிரத்யேகக் குழு கவனித்து வருவதாகவும், இது வெறும் கிரிக்கெட் பற்றிய படம் மட்டுமல்லாமல் அதன் பின்னணியில் உள்ள பிசினஸ், சர்வதேச அரசியல் மற்றும் மனித உணர்வுகளைப் பேசும் உலகளாவிய படமாக இருக்கும் என்றும் லலித் மோடி தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரை உருவாக்குவதற்காகத் தான் உலகம் முழுவதும் பயணித்த சுவாரசியமான பின்னணிக் கதைகள் இந்தப் படத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.