விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்; 'ஜன நாயகன்' தணிக்கை வழக்கில் அதிரடித் தீர்ப்பு
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜன நாயகன்' படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பாக CBFC தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு இன்று தனது தீர்ப்பை வெளியிட்டுள்ளது. தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டது. முன்னதாக, படத்திற்கு 'U/A' சான்றிதழ் வழங்கத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இந்த வழக்கை மீண்டும் தனி நீதிபதியின் விசாரணைக்கே அனுப்பியுள்ளது. தணிக்கை வாரியம் தனது வாதங்களை முன்வைக்க உரிய வாய்ப்பளித்து, தனி நீதிபதி இதனை மீண்டும் புதிதாக விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
வெளியீடு
'ஜன நாயகன்' படத்தின் வெளியீடும் மேலும் தாமதமாகும்
இந்த தீர்ப்பின் மூலம் 'ஜன நாயகன்' திரைப்படம் இப்போதைக்கு திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக வேண்டிய இப்படம், சட்டப் போராட்டங்களால் தள்ளிப்போனது. தற்போது வழக்கு மீண்டும் ஆரம்ப நிலைக்குச் சென்றுள்ளதால், தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் மேலும் சில வாரங்கள் தாமதம் ஏற்படலாம். இதனால் பிப்ரவரி முதல் வாரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்த தயாரிப்பு தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது. விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்னதாக வெளியாகும் கடைசிப் படம் என்பதால், இதில் இடம்பெற்றுள்ள ராணுவம் மற்றும் அரசியல் தொடர்பான காட்சிகளே இந்தச் சட்ட சிக்கலுக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.