Page Loader
பொம்மன்-பெல்லி தம்பதியினர், ஆஸ்கார் விருது வென்ற ஆவண படத்தின் இயக்குனர் மீது குற்றச்சாட்டு 
பொம்மன்-பெல்லி தம்பதியினர் ஆவண படத்தின் இயக்குனர் மீது குற்றச்சாட்டு

பொம்மன்-பெல்லி தம்பதியினர், ஆஸ்கார் விருது வென்ற ஆவண படத்தின் இயக்குனர் மீது குற்றச்சாட்டு 

எழுதியவர் Nivetha P
Aug 04, 2023
07:48 pm

செய்தி முன்னோட்டம்

அண்மையில் ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படம்-'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்'படத்தினை இயக்குனர் கார்த்திகி கோன்சால்வஸ் என்பவர் இயக்கியிருந்தார். பொம்மன்-பெல்லி தம்பதியினரின் வாழ்க்கையினை பின்னணியாகக்கொண்டே இப்படம் எடுக்கப்பட்டு பெரும் வெற்றியினை அடைந்தது. இதனால் அத்தம்பதியினரும் பெருமளவில் பிரபலமடைந்தனர். பிரதமர் மோடி முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை பலரும் இவர்களை நேரில் சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் கார்த்திகி மீது இத்தம்பதி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். ஆவணப்படம் எடுக்கையில் தங்களிடம் அன்பாக நடந்துக்கொண்டதாகவும் தற்போது எவ்வித உதவியினையும் செய்வதில்லை என்றும் கூறியுள்ளனர். மேலும், இவர்களுக்கு சொந்தமாக வீடு, கார், இடம் உள்ளிட்டவை வாங்கி கொடுத்துள்ளதாகவும், வங்கிக்கணக்கில் பணம் போட்டு வைத்திருப்பதாகவும் கார்த்திகி பல்வேறு பேட்டிகளில் கூறுவது அனைத்தும் பொய் என இத்தம்பதி மிகுந்த ஆதங்கத்துடன் கூறியுள்ளனர்.

ஆவணப்படம் 

தங்களிடம் பெற்ற பணத்தையும் கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு 

மேலும், "அந்த திரைப்படத்தில் ஒரு திருமண விழா போன்ற ஒரு காட்சியினை எடுக்க தயாரிப்பு நிறுவனம் பணம் கொடுக்கவில்லை. நாங்கள் எங்கள் பேத்தி படிப்பிற்காக போஸ்ட் ஆபிஸில் போட்டு வைத்திருந்த பணம் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் வரை எடுத்து கொடுத்தோம். ஆனால் இதுவரை அந்த பணத்தினை அவர் திருப்பி தரவில்லை" என்றும் கூறியுள்ளனர். அதேபோல் தங்களை மும்பைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக அழைத்து சென்று புகைப்படங்கள் எடுத்து கொண்ட பின்னர் யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும், தமிழகத்திற்கு திரும்பி வர பணமும் கொடுக்கவில்லை, மற்றொருவர் செய்த உதவி மூலம் ஊருக்கு திரும்பியதாகவும் கூறியுள்ளனர். தங்கள் பேத்தியை படிக்க வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார், ஆனால் அதனையும் அவர் செய்யவில்லை என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை இத்தம்பதி வைத்துள்ளனர்.