மீண்டும் ஒரு முறை தமிழ் பற்றை மேடையில் நிரூபித்த ஏ.ஆர்.ரஹ்மான்
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் மேல் பற்று கொண்டவர் என்பதை பல முறை நிரூபித்துள்ளார். உலக அரங்கில் ஆஸ்கார் விருது பெற்ற போதும் கூட, தான் ஒரு தமிழன் என்பதை பறைசாற்றும் வகையில், மூன்றே வார்த்தைகளில் தனது உரையை நிறைவு செய்தார், அதுவும் தனது தாய்மொழியான தமிழில். அதன் பின்னரும் ஹிந்தி திணிப்பிற்கு எதிராக, தனது பாணியில் குரல் கொடுத்துவந்தார். ஹிந்தி கட்டாயப்பாடமாக இருக்காது என மத்திய அரசு, மசோதாவை திருத்தியமைக்கப்பட்டதற்கு, அதனை வரவேற்கும் விதமாக ட்வீட் செய்திருந்தார். ரஹ்மான், தான் மட்டுமல்லாது, தனது குடும்பத்தினரும் பொது வெளியில் தமிழில் உரையாட வேண்டும் என்பதை பல சந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்தியுள்ளார்.
மகனை தமிழில் உரையாட சொல்லிய ரஹ்மான்
சில மாதங்களுக்கு முன்னர் ஒரு விழா மேடையில், ரஹ்மானின் மனைவியிடம், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஏதோ கேள்வி கேட்க, அவரும் ஆங்கிலத்தில் பதில் கூற துவங்கினார். உடனே இடைநிறுத்திய ரஹ்மான், "தமிழில் பேசுங்கள்" என கூறினார். அதேபோல, இரு தினங்களுக்கு முன்னர் கோவையில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியில், தனது மகன் அமீன் ஆங்கிலத்தில் ஏதோ பேச தொடங்க, உடனே அவரை நிறுத்திய ரஹ்மான்,"தமிழில் பேசு பா" எனக்கூறினார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தான் தயாரித்த '99 சாங்ஸ்' படத்தின் ப்ரோமோஷனின் போது கூட, தொகுப்பாளர் மேடையில் ஹிந்தியில் உரையாடிய போது, உடனே மேடையிலிருந்து ரஹ்மான் இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.