முடிவுக்கு வந்த 4 ஆண்டுகால பந்தம்! பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்ற ஹன்சிகா; ஜீவனாம்சம் வேண்டாமென மறுப்பு
செய்தி முன்னோட்டம்
பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரது கணவர் சோஹேல் கதுரியா ஆகியோருக்கு மும்பையில் உள்ள பந்த்ரா குடும்ப நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது. பரஸ்பர சம்மதத்துடன் பிரிவதற்கு இருவரும் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது அவர்களின் நான்கு ஆண்டுகால திருமண வாழ்க்கை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த விவாகரத்து நடைமுறையில் ஹன்சிகா எவ்வித ஜீவனாம்சத்தையும் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிவு
கருத்து வேறுபாடுகளும் பிரிவும்
ஹன்சிகா மற்றும் தொழிலதிபரான சோஹேல் கதுரியா ஆகியோருக்கு இடையே கடந்த சில காலங்களாகவே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாகத் தெரிகிறது. அவர்களின் வாழ்க்கை முறை, குணாதிசயங்கள் மற்றும் கருத்துகளில் நிலவிய மிகப்பெரிய முரண்பாடுகள் காரணமாக அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சமாதானம் செய்ய முயற்சி செய்தும், அது பலனளிக்காததால் இருவரும் கடந்த ஜூலை 2, 2024 முதல் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
பின்னணி
திருமணப் பின்னணி
ஹன்சிகா மற்றும் சோஹேல் கதுரியாவின் திருமணம் கடந்த டிசம்பர் 4, 2022 அன்று ஜெய்ப்பூரில் உள்ள மண்டோடா கோட்டையில் மிகப்பிரம்மாண்டமாக இந்து முறைப்படி நடைபெற்றது. நீண்ட கால நண்பர்களாக இருந்த இவர்கள் இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. திருமணத்திற்குப் பிறகு மிகக் குறுகிய காலமே ஒன்றாக வாழ்ந்த இவர்கள், தற்போது சுமூகமான முறையில் பிரிந்து செல்வதாகத் தெரிவித்துள்ளனர்.
சினிமா
ஹன்சிகாவின் திரைப் பயணம்
சிறுவயதில் 'ஷக்க லக்க பூம் பூம்' போன்ற தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் 'கோய் மில் கயா' திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா, பின்னர் தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது விவாகரத்து பெற்றுள்ள நிலையில், அவர் தனது முழு கவனத்தையும் மீண்டும் திரைப்படங்களில் செலுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.