ரெப்போ வட்டி குறைப்பால் வீட்டுக் கடன் EMI, தனிநபர் கடன் வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்பு!
செய்தி முன்னோட்டம்
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது முக்கிய கடன் வழங்கும் விகிதத்தை (ரெப்போ ரேட்) 25 அடிப்படை புள்ளிகள் (0.25%) குறைத்து 5.25% ஆக நிர்ணயம் செய்துள்ளது. இதனையடுத்து, வங்கி கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த வட்டி விகிதக் குறைப்பானது தனிநபர் நிதி மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் ஏற்படுத்தக்கூடிய முக்கியத் தாக்கம் குறித்த விவரங்கள் இதோ:
ரியல் எஸ்டேட்
வீட்டு கடன் மற்றும் ரியல் எஸ்டேட் தாக்கம்
ரெப்போ விகிதம் குறைவதால், வங்கிகள் தங்கள் கடன் வழங்கும் விகிதங்களை (MCLR / EBLR) மாற்றி அமைக்கும். இது வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு நேரடி நன்மைகளை அளிக்கும். மிதக்கும் வட்டி விகிதத்தில் (Floating Rate) வீட்டுக் கடன் பெற்றிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மாதத் தவணை (EMI) குறைய அதிக வாய்ப்பு உள்ளது. வட்டி விகிதங்கள் குறைவது, வீட்டுக் கடன்களை இன்னும் மலிவானதாக மாற்றும். இது நடுத்தர வர்க்கத்தினருக்கு வீடுகளை வாங்குவதை எளிதாக்குவதோடு, ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியையும் வேகப்படுத்தும். புதிதாக வீடு வாங்க திட்டமிடும் வாடிக்கையாளர்கள் குறைவான வட்டி விகிதத்தில் கடனைப் பெற முடியும்.
தனிநபர் கடன்
தனிநபர் கடன்கள் மீதான தாக்கம்
வீட்டுக் கடன்களை போலவே, தனிநபர் கடன்கள் (Personal Loans) மற்றும் வாகனக் கடன்கள் (Vehicle Loans) போன்ற பிற நுகர்வோர் கடன்களுக்கான வட்டி விகிதங்களும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி விகிதங்கள் குறைவதால், தனிநபர் கடன்களை பெறுவதற்கான செலவு குறையும். இது மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படும்போது, எளிதாகவும் மலிவாகவும் கடன் பெற உதவும். மொத்தத்தில், கடன்கள் மீதான வட்டி குறையும்போது, கடன் வாங்குதல் அதிகரித்து, தனிநபர் செலவினங்கள் உயர்ந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இது ஊக்கமளிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.