LOADING...
சம்பள ஊழியர்களுக்கு அரிய வாய்ப்பு: டேக் ஹோம் சம்பளத்தை மாற்றி என்பிஎஸ் மூலம் வரியை மிச்சப்படுத்துவது எப்படி?
டேக் ஹோம் சம்பளத்தை மாற்றி என்பிஎஸ் மூலம் வரியை மிச்சப்படுத்தும் முறை

சம்பள ஊழியர்களுக்கு அரிய வாய்ப்பு: டேக் ஹோம் சம்பளத்தை மாற்றி என்பிஎஸ் மூலம் வரியை மிச்சப்படுத்துவது எப்படி?

எழுதியவர் Sekar Chinnappan
Jul 03, 2026
06:18 pm

செய்தி முன்னோட்டம்

தற்போது வருமான வரித் தாக்கல் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், பெரும்பாலான சம்பள ஊழியர்கள் முன்வைக்கும் ஒரே குறைபாடு, புதிய வரி விதிப்பில் வரி சேமிப்பிற்கான முதலீட்டு சலுகைகள் மிகவும் குறைவாக இருப்பதுதான். ஆனால், சட்டப்பூர்வமாக உங்களது வரிப் பளுவைக் குறைத்து, அதே நேரத்தில் உங்களது ஓய்வூதியக் காலத்திற்கான ஒரு பெரும் நிதியையும் உருவாக்க உங்களுடைய சம்பளக் கட்டமைப்பிலேயே ஒரு அருமையான வழி ஒளிந்திருக்கிறது. அதுதான் என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் நிறுவனங்கள் செய்யும் பங்களிப்பு ஆகும்.

என்பிஎஸ் சலுகை

புதிய வரி விதிப்பிலும் தொடரும் என்பிஎஸ் சலுகை

பழைய வரி விதிப்பில் இருந்த பல முக்கிய வரி விலக்குகள் புதிய முறையில் நீக்கப்பட்டாலும், நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்காக என்பிஎஸ் கணக்கில் செலுத்தும் தொகைக்கான வரி சலுகை எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே நீடிக்கிறது என ஆடிட்டர்கள் விளக்குகின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு நிறுவனம் தனது ஊழியரின் ஓய்வூதியக் கணக்கிற்கு செலுத்தும் தொகையானது, முதலில் ஊழியரின் மொத்த சம்பளத்தில் சேர்க்கப்பட்டு, பின்னர் வருமான வரி சட்டத்தின் கீழ் முழுமையாகக் கழிக்க அனுமதிக்கப்படுகிறது. இது ஊழியர்களுக்கு இரட்டை நிதி நன்மையை வழங்குகிறது.

14% வரிவிலக்கு

தனியார் துறை ஊழியர்களுக்கும் இனி 14% வரிவிலக்கு உண்டு

இதற்கு முன்பு வரை மத்திய, மாநில அரசு ஊழியர்கள் தங்களது அடிப்படைச் சம்பளத்தில் 14 சதவீதம் வரை நிறுவன என்பிஎஸ் பங்களிப்பாக வரிவிலக்கு பெற முடிந்தது. ஆனால் தனியார் துறை ஊழியர்களுக்கு இந்த வரம்பு 10 சதவீதமாக மட்டுமே இருந்தது. தற்போது புதிய வரி விதிப்பின் கீழ் இந்த இடைவெளி முற்றிலுமாக நீக்கப்பட்டு, தனியார் துறை ஊழியர்களும் தங்களது அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 14 சதவீதம் வரை கார்ப்பரேட் என்பிஎஸ் சலுகையின் கீழ் வரிவிலக்காகப் பெற்று பயன் அடையலாம் என அரசு அறிவித்துள்ளது.

Advertisement

சம்பளம் மாற்றியமைப்பு

எச்ஆர் குழுவிடம் சம்பளத்தை மாற்றி அமைக்கக் கோரலாம்

உங்களது நிறுவனம் கார்ப்பரேட் என்பிஎஸ் சலுகையை வழங்கினால், உங்களது ஒட்டுமொத்த சிடிசி கட்டமைப்பில் கைக்கு வரும் ரொக்கச் சம்பளத்தை சற்று குறைத்துக் கொண்டு, அதற்குப் பதிலாக நிறுவனம் என்பிஎஸ் திட்டத்தில் செலுத்தும் தொகையை அதிகரிக்குமாறு உங்களது மனிதவள மேம்பாட்டு (எச்ஆர்) அல்லது பேரோல் குழுவிடம் நீங்கள் தாராளமாகக் கோரிக்கை வைக்கலாம். ஆனால், இதனால் உங்களது மாதாந்திர டேக் ஹோம் (Take-home) சம்பளம் சற்று குறையும் என்பதை ஊழியர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்த சலுகையானது அதிக வருவாய் ஈட்டும் உயர் அதிகாரிகளுக்குப் மிகப்பெரிய அளவில் வரியை மிச்சப்படுத்த உதவும்.

Advertisement

முக்கிய வரம்பு

மறந்துவிடக் கூடாத 7.5 லட்சம் ரூபாய் முக்கிய வரம்பு

இந்த கார்ப்பரேட் என்பிஎஸ் திட்டம் அதிக வரிச் சேமிப்பைத் தந்தாலும், இதற்கு மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட உச்சவரம்பை விதித்துள்ளது. ஒரு நிதியாண்டில் ஒரு ஊழியருக்காக நிறுவனம் செலுத்தும் என்பிஎஸ், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் சூப்பர் அன்யுவேஷன் நிதி ஆகிய மூன்றின் ஒட்டுமொத்த கூட்டுப் பங்களிப்பும் 7.5 லட்சம் ரூபாயைத் தாண்டக் கூடாது. இந்த வரம்பிற்கு மேல் நிறுவனம் செலுத்தும் எந்தவொரு தொகையும் ஊழியரின் வருமானமாகக் கருதப்பட்டு அதற்குத் தகுந்த வரி விதிக்கப்படும். மேலும், பல ஊழியர்கள் தங்களது சிடிசி அல்லது மொத்த சம்பளத்தை வைத்துக் கணக்கிட்டு தவறு செய்வதாகவும், இந்த விலக்கு அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி தொகையின் மீது மட்டுமே செல்லும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Advertisement