ஜியோமார்ட் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸடராக எம்எஸ் தோனி நியமனம்
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதன்மையான இ-காமர்ஸ் தளமான ஜியோமார்ட், எம்எஸ் தோனியை தனது பிராண்ட் அம்பாஸடராக நியமித்துள்ளது. இந்தியாவில் அடுத்தடுத்து பண்டிகை வரவுள்ள நிலையில், நிறுவனத்தின் விற்பனையை அதிகரிப்பதற்காக எம்எஸ் தோனியை நிறுவனத்தின் பிராண்ட் தூதுவராக அறிவித்துள்ளது. மேலும் எம்எஸ் தோனி இடம் பெறும் விளம்பர வீடியோ ஒன்றையும் நிறுவனம் அக்டோபர் 8 ஆம் தேதி வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. ஜியோமார்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தீப் வராகந்தி இது குறித்து கூறுகையில், ஜியோமார்ட்டைப் போலவே, நம்பிக்கை, நம்பகத்தன்மை மற்றும் உறுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்எஸ் தோனியை பிராண்ட் தூதராக சேர்ப்பதில் பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார்.
ஜியோமார்ட்டின் தூதுவராக பொறுப்பேற்பது குறித்து எம்எஸ் தோனி மகிழ்ச்சி
ஜியோமார்ட்டுடனான தனது தொடர்பு குறித்து பேசிய தோனி, "ஜியோமார்ட் உள்நாட்டு இ-காமர்ஸ் பிராண்டாக இருப்பதால், அவை இந்தியாவில் டிஜிட்டல் சில்லறை புரட்சியை ஆதரிக்கும் நோக்கத்துடன் செயல்படுகின்றன." எனத் தெரிவித்துள்ளார். மேலும், "இந்தியா அதன் துடிப்பான கலாச்சாரம், மக்கள் மற்றும் திருவிழாக்களுக்கு பெயர் பெற்றது. ஜியோமார்ட்டின் ஜியோ உத்சவ் பிரச்சாரம் இந்தியா மற்றும் அதன் மக்களைக் கொண்டாடுவதற்கான ஒரு அடையாளமாகும். ஜியோமார்ட் உடன் வருவதற்கும், மில்லியன் கணக்கானவர்களின் ஷாப்பிங் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்." என்று அவர் மேலும் கூறினார். 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜியோமார்ட் நிறுவனம் இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது.