
எட்டு வருடங்களில் இல்லாத அளவு சரிவு; செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 1.54% ஆகக் குறைவு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் செப்டம்பர் 2025 இல் 1.54% ஆகக் குறைந்து, 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. முன்னதாக, இது ஆகஸ்டில் 2.07% ஆக இருந்தது. காய்கறி மற்றும் பருப்பு வகைகளின் விலை சரிவு, மேலும் சாதகமான அடிப்படை விளைவு ஆகியவை இதற்குக் காரணமாக அமைந்துள்ளன. அதேசமயம், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பெரிதும் உயர்ந்ததால் முக்கிய பொருட்களின் (Core) பணவீக்கம் இரண்டு ஆண்டுகளில் அதிகபட்சமாக 4.43% ஆக உயர்ந்துள்ளது. இந்த சரிவு, பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்த 1.5% அளவுடன் ஒத்துப்போகிறது. இது கடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) 2-6% இலக்கு வரம்பின் கீழ் விழுந்துள்ளது.
உணவு பணவீக்கம்
உணவு பணவீக்கம் சரிவு
உணவு பணவீக்கம் ஆகஸ்டின் -0.64% இலிருந்து செப்டம்பரில் -2.28% ஆகக் குறைந்தது. காய்கறிகள் -21.38% மற்றும் பருப்பு வகைகள் -15.32% என விலை சரிவைக் கண்டுள்ளன. இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் பராஸ் ஜஸ்ராய் தெரிவித்ததாவது, 23 முக்கிய நுகர்வுப் பிரிவுகளில் 17 பிரிவுகளில் பணவீக்கம் குறைந்துள்ளதாகவும், இது பரந்த அளவிலான தணிவு போக்கைக் காட்டுவதாகவும் கூறினார். இருப்பினும் உணவு மற்றும் எரிபொருள் தவிர்ந்த முக்கிய பொருட்களில் தங்கம், வெள்ளி மற்றும் வீட்டு வாடகை போன்றவை விலை உயர்வை சந்தித்துள்ளன. ஜூலை-செப்டம்பர் காலாண்டில் சராசரி பணவீக்கம் 1.74% ஆக இருந்தது, இது ஆர்பிஐ கணித்த 1.8% உடன் இணங்குகிறது.