உலக பங்குச் சந்தை மதிப்பில் இந்தியா மீண்டும் 5வது இடத்தைப் பிடித்து சாதனை! தைவான் மற்றும் தென்கொரியாவை பின்னுக்குத் தள்ளியது
செய்தி முன்னோட்டம்
உலகளாவிய பங்குச் சந்தையின் சந்தை மதிப்பு தரவரிசையில், இந்தியப் பங்குச் சந்தை தற்பொழுது மீண்டும் 5வது இடத்தைப் பிடித்து முன்னேறியுள்ளது. முன்னதாக 7 ஆவது இடத்திற்கு சரிந்திருந்த இந்திய சந்தை, தற்பொழுது தைவான் மற்றும் தென் கொரிய நாடுகளின் சந்தைகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக இந்த இடத்தை மீண்டும் தன்வசப்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் செமிகண்டக்டர் துறைகளில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த சாதனை அளவிலான ஏற்றத்திற்குப் பிறகு, முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தை லாக்கிங் (Profit booking) செய்யத் தொடங்கியதே தைவான் மற்றும் தென் கொரிய சந்தைகளின் வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணமாக அமைந்தது.
சந்தை மதிப்பு
5 டிரில்லியன் டாலர் எல்லையைக் கடந்த இந்தியாவின் பங்குச் சந்தை மதிப்பு
தற்போதைய நிலவரப்படி, இந்தியாவின் ஒட்டுமொத்தப் பங்குச் சந்தை மதிப்பு 5.05 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், 5 டிரில்லியன் டாலர் எல்லைக்குக் கீழே சரிந்துள்ள தைவான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் முறையே 4.97 டிரில்லியன் டாலர் மற்றும் 4.66 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்புகளுடன் 6 மற்றும் 7 ஆவது இடங்களுக்குப் பின்தள்ளப்பட்டுள்ளன. இந்த உலகளாவிய பட்டியலில் அமெரிக்கா வழக்கம் போல முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளதுடன், சீனா 2வது இடத்திலும், ஜப்பான் 3வது இடத்திலும் மற்றும் ஹாங்காங் 4வது இடத்திலும் தொடர்ந்து நீடித்து வருகின்றன.
இந்திய சந்தை முன்னேற்றம்
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியும் மற்றும் இந்திய சந்தையின் முன்னேற்றமும்
நடப்பு ஜூன் மாதத்தில் உலகளாவிய பங்குச் சந்தைகள் மந்தமான நிலையை சந்தித்த வேளையில், இந்திய சந்தைகள் மட்டும் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இந்த மாதத்தில் இந்தியாவின் சந்தை மதிப்பு 2.75% வளர்ச்சியைக் கண்டுள்ள சூழலில், தென் கொரியா 4.7% மற்றும் தைவான் 2.3% சரிவைச் சந்தித்துள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் டாங்கர்களின் போக்குவரத்து சீரானதால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. இது இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி செலவைக் குறைத்து, இந்திய ஈக்விட்டிகளுக்குப் பெரும் சாதகமாக அமைந்து சந்தை மதிப்பை உயர்த்தியுள்ளது.
ஆர்பிஐ
முதலீட்டாளர்களை ஈர்க்கும் ஆர்பிஐ நடவடிக்கைகள் மற்றும் நிஃப்டியின் தற்போதைய நிலை
இந்திய சந்தையின் இந்தத் திடீர் எழுச்சிக்கு அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வாங்கியதும் முக்கியக் காரணமாகும். மேலும், கடன் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அண்மையில் மேற்கொண்ட நடவடிக்கைகளும் இந்த நேர்மறை வளர்ச்சிக்கு வழிவகுத்தன. நடப்பு 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்துடன் ஒப்பிடும்போது இந்தியாவின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு டாலர் மதிப்பில் 4.8% சரிவில் இருந்தாலும், ஜூன் மாதத்தில் நிஃப்டியின் பிஇ மல்டிபிள் (P/E multiple) உச்சகட்ட 24x அளவிலிருந்து 18x அளவிற்கு இறங்கி, முதலீட்டிற்கு உகந்த சரியான மதிப்பை எட்டியுள்ளது.