LOADING...
சிலிண்டர் இல்லாம சமைக்கணுமா? இண்டக்ஷன் அடுப்புகளுக்குத் திடீர் டிமாண்ட்; கடைகளில் 'நோ ஸ்டாக்' போர்டு
ப்ளிங்கிட், ஸ்விக்கியில் விற்றுத் தீர்ந்த இண்டக்ஷன் அடுப்புகள்!

சிலிண்டர் இல்லாம சமைக்கணுமா? இண்டக்ஷன் அடுப்புகளுக்குத் திடீர் டிமாண்ட்; கடைகளில் 'நோ ஸ்டாக்' போர்டு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 11, 2026
04:30 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலால் இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மாற்று ஏற்பாடாக மின்சார அடுப்புகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்னை, பெங்களூர், கொல்கத்தா மற்றும் மும்பை போன்ற பெருநகரங்களில் ப்ளிங்கிட், ஜெப்டோ மற்றும் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் போன்ற விரைவு வணிகத் தளங்களில் இண்டக்ஷன் அடுப்புகள் சில நிமிடங்களிலேயே 'விற்றுத் தீர்ந்துவிட்டன' (Sold Out) எனப் பட்டியலிடப்பட்டுள்ளன.

பின்னணி

ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்: எரிவாயு தட்டுப்பாட்டின் பின்னணி

இந்தத் திடீர் நெருக்கடிக்கு முதன்மையான காரணம், இந்தியா தனது எல்பிஜி தேவையில் 60 சதவீதத்திற்கும் மேலாக இறக்குமதி செய்வதே ஆகும். இதில் சுமார் 90 சதவீத விநியோகம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறுகிறது. போர் பதற்றத்தால் இந்த வழித்தடம் முடங்கியுள்ளதால், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, டெல்லியில் சிலிண்டர் விலை அண்மையில் ரூ. 60 உயர்த்தப்பட்டு ரூ. 913-ஆக அதிகரித்துள்ளது. மேலும், மும்பை போன்ற நகரங்களில் உணவகங்கள் சிலிண்டர் கிடைக்காமல் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

தேவை

தவிர்க்க முடியாத தேவையாக மாறிய இண்டக்ஷன் அடுப்புகள்

முன்பெல்லாம் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்ட இண்டக்ஷன் அடுப்புகள், இன்று நகர்ப்புற வீடுகளில் அத்தியாவசியத் தேவையாக மாறியுள்ளன. 'வொண்டர் செஃப்' (Wonderchef) நிறுவனத்தின் தரவுகளின்படி, ஏற்கனவே 15 சதவீத வீடுகளில் பேக்கப் (Backup) தேவைகளுக்காக இண்டக்ஷன் அடுப்புகள் உள்ளன. சிலிண்டர் கிடைக்கத் தாமதமாகும் காலங்களில் பால் காய்ச்சுவது, தேநீர் தயாரிப்பது போன்ற அன்றாடத் தேவைகளுக்கு மக்கள் மின்சார அடுப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இது இண்டக்ஷன் அடுப்புகள் மட்டுமின்றி, அதற்குப் பொருத்தமான பாத்திரங்களின் தேவையையும் அதிகரித்துள்ளது.

Advertisement

அரசு நடவடிக்கை

அரசின் நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய கையிருப்பு

சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு 'அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955' ஐ அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் சிலிண்டர்களைப் பதுக்குவது அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தடுக்கப்படும். இந்தியாவில் தற்போது 25 முதல் 30 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வணிக ரீதியிலான சிலிண்டர் புகார்களைக் கையாள எண்ணெய் நிறுவன அதிகாரிகளைக் கொண்ட ஒரு சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement