இந்தியா - ஜப்பான் 16-வது வருடாந்திர உச்சிமாநாடு: ஏஐ, பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் துறைகளில் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தங்கள்
செய்தி முன்னோட்டம்
புதுடெல்லியில் நடைபெற்ற 16-வது இந்தியா - ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில், செயற்கை நுண்ணறிவு(AI), பொருளாதார பாதுகாப்பு, பாதுகாப்புத் துறை மற்றும் தூய்மை ஆற்றல் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இரு நாடுகளும் வரலாற்று சிறப்புமிக்க புதிய ஒப்பந்தங்களை வெளியிட்டு கூட்டு வியூகத்தை வலுப்படுத்தியுள்ளன. ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனாய் தகாஇச்சியை வரவேற்றுப் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த உச்சிமாநாடு ஆசியாவின் மிக முக்கியமான மூலோபாயக் கூட்டாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
கூட்டு
தொழில்நுட்பம் மற்றும் ஏஐ கூட்டு மேம்பாடு
ஜப்பானின் துல்லியமான தொழில்நுட்பமும், இந்தியாவின் மென்பொருள் திறனும் இணைந்து உலகளாவிய ஏஐ வளர்ச்சிக்கு புதிய வேகத்தை அளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். செமிகண்டக்டர்கள், குவாண்டம் தொழில்நுட்பம், கிரிடிகல் மினரல்ஸ் மற்றும் விநியோகச் சங்கிலி நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்படப் பிரத்யேகக் கூட்டுப் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Sharing my remarks during the joint press meet with PM Sanae Takaichi of Japan. @takaichi_sanae
— Narendra Modi (@narendramodi) July 2, 2026
https://t.co/vIcOdb1d8j
ஒப்பந்தம்
'யுனிகார்ன்' ஆண்டெனா மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம்
பாதுகாப்புத் துறையில் புதிய மைல்கல்லாக, கடற்படை ரேடியோ ஆண்டெனாவான 'யுனிகார்ன்' (Unicorn) கூட்டு மேம்பாட்டுத் திட்டத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, கடல்சார் பாதுகாப்பு மற்றும் சர்வதேச விதிகளின் அடிப்படையிலான ஒழுங்கை வலுப்படுத்த இந்த முதல் கூட்டுப் பாதுகாப்பு தயாரிப்பு திட்டம் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் 10 டிரில்லியன் யென் (சுமார் 67 பில்லியன் டாலர்) ஜப்பானிய முதலீட்டை ஈர்க்கவும், ஜப்பானிய நிறுவனங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான 120 புதிய வணிக ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளன.
எரிவாயு திட்டம்
சுற்றுச்சூழல் மற்றும் உயிரி எரிவாயு திட்டம்
தூய்மை ஆற்றல் மாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் 'இந்தியா-ஜப்பான் பயோ-கேஸ் முன்முயற்சி' தொடங்கப்பட்டுள்ளது. இதன் கீழ், இந்தியா முழுவதும் 1,000 உயிரி எரிவாயு மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் ஆலைகள் நிறுவப்பட உள்ளன, இது கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் எனப் பிரதமர் கூறினார். முன்பு உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி உதவிகளை மட்டுமே மையமாக கொண்டிருந்த இந்தியா-ஜப்பான் உறவு, தற்போது உயர் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்திய மூலோபாயத்தை நோக்கிய ஒரு புதிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது.