
புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதற்கு ஹெச்டிஎஃப்சி வங்கியின் துபாய் கிளைக்குத் தடை; காரணம் என்ன?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியின் துபாய் சர்வதேச நிதி மையக் கிளைக்கு (Dubai International Financial Centre - DIFC), புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதற்கும், அவர்களுடன் நிதிச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கும் துபாய் நிதிச் சேவை ஆணையம் (DFSA) தடை விதித்துள்ளது. சமீதத்தில், குறைந்தது நான்கு வெளிநாடு வாழ் இந்திய (NRI) வாடிக்கையாளர்களின் நிலையான வைப்புத் தொகைகளை (Fixed Deposits) தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான புகார்களை வங்கி எதிர்கொண்டதைத் தொடர்ந்து, DFSA இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சுமார் ரூ. 25-30 கோடி மதிப்பிலான வைப்புத் தொகைகள் வங்கியின் மத்திய கிழக்குச் செயல்பாடுகளால் கிரெடிட் சூயிஸின் கூடுதல் அடுக்கு-1 பத்திரங்களை வாங்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டன என்று கூறப்படுகிறது.
தடை
எந்தெந்த நடவடிக்கைகளுக்குத் தடை?
சனி (செப்டம்பர் 27) அன்று வெளியிடப்பட்ட பங்குச் சந்தை அறிக்கையின்படி, DIFC கிளை, "புதிய வாடிக்கையாளர்களைக் கோருதல், சேர்ப்பது அல்லது அவர்களுடன் எந்தவொரு நிதி விளம்பரங்களில் ஈடுபடுவது" ஆகியவற்றில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது. நிதிப் பொருட்களுக்கு ஆலோசனை வழங்குதல், ஒப்பந்தங்களை ஏற்பாடு செய்தல் மற்றும் கடன் வழங்குவது தொடர்பான ஆலோசனைகள் ஆகியவை இந்தத் தடையில் அடங்கும். இருப்பினும், இந்தத் தடை DIFC கிளையின் தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவைகளுக்குப் பொருந்தாது என்று வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. DFSA வின் உத்தரவுகளை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை வங்கி ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும், ஆணையத்தின் கவலைகளை விரைவில் நிவர்த்தி செய்யத் தயாராக இருப்பதாகவும் ஹெச்டிஎஃப்சி வங்கி உறுதி அளித்துள்ளது.