கிக் ஒர்க்கர்ஸ், ஃப்ரீலான்ஸர்களுக்குப் புதிய இபிஎஃப்ஓ திட்டம்! முழு விபரம் உள்ளே
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) பலன்களை, இனி ஃப்ரீலான்ஸர்கள், ஆலோசகர்கள், கிக் ஒர்க்கர்ஸ் (Gig Workers) மற்றும் சுயதொழில் செய்யும் தற்காலிகத் தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. இதற்காக ஒரு புதிய யுனிவர்சல் பிஎஃப் திட்டத்தை உருவாக்குவது குறித்த முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் தற்பொழுது தொழிலாளர் நலத்துறை வட்டாரத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால், முறைசாராத் துறைகளில் இருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் முதன்முறையாகப் பிஎஃப் நெட்வொர்க்கிற்குள் கொண்டு வரப்படுவார்கள்.
சேமிப்பு முறைகள்
விருப்ப பங்களிப்பு மற்றும் நெகிழ்வான சேமிப்பு முறைகள்
தற்போது ஆலோசனையில் உள்ள இந்த புதிய திட்டத்தின் கீழ், தற்காலிகத் தொழிலாளர்கள் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் இந்த சேமிப்பில் இணையலாம்.
மாத சம்பளம் வாங்குபவர்களைப் போலன்றி, இவர்களுக்கு நிலையான மாத வருமானம் இருக்காது என்பதால், தங்களது வசதிக்கேற்ப தினசரி, மாதாந்திர அல்லது வருடாந்திர அடிப்படையில் பங்களிப்புத் தொகையை செலுத்தும் நெகிழ்வான எளிய ஆப்ஷன்கள் இதில் வழங்கப்படவுள்ளன.
இந்த வைப்பு நிதி சேமிப்பிற்கு வழக்கமான இபிஎஃப் திட்டத்தைப் போலவே வருடாந்திர வட்டி விகிதமும் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் எனத் தெரிகிறது.
வரி சலுகை
2.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி சலுகைகள்
சாதாரண பிஎஃப் கணக்குகளுக்கு வழங்கப்படும் அனைத்து வகையான வரி சலுகைகளும் இந்த புதிய திட்டத்திற்கும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதன்படி, ஒரு நிதியாண்டில் இந்தத் திட்டத்தில் செலுத்தப்படும் 2.5 லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டுத் தொகைக்கும் மற்றும் அதற்குத் திரட்டப்படும் வட்டி வருவாய்க்கும் முழுமையான வருமான வரி விலக்கு அளிக்கப்படலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன.
இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அரசாங்க அறிவிப்புகள் எதுவும் இதுவரை தனியாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஓய்வூதியம்
ஓய்வூதியக் காலத்தில் பணத்தை எடுக்கப் புதிய 'எஸ்டபிள்யூபி' (SWP) முறை
இபிஎஃப்ஓ அமைப்பு இந்த புதிய திட்டத்தில் பணம் எடுக்கும் நடைமுறையிலும் ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வர ஆலோசித்து வருகிறது.
வழக்கமாக ஓய்வு பெற்றவுடன் ஒட்டுமொத்தப் பணத்தையும் ஒரே நேரத்தில் எடுக்கும் முறைக்கு மாற்றாக, மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ளதைப் போன்ற 'சிஸ்டமேடிக் வித்ட்ராயல் பிளான்' (SWP) முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் ஓய்வு பெற்றவர்கள் தங்களது மாதாந்திரத் தேவைக்கேற்ப குறிப்பிட்ட தொகையை தவணை முறையில் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.
இந்த சிறப்பான வசதி தற்பொழுது இருக்கும் வழக்கமான இபிஎஃப் சந்தாதாரர்களுக்கும் நீட்டிக்கப்பட பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரம்
திட்டத்தின் தற்போதைய நிலவரம் என்ன?
சமூக பாதுகாப்புச் சட்டம் 2020ன் படி, முறைசாராத் தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பை வழங்க மத்திய அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது.
இந்த புதிய யுனிவர்சல் திட்டத்திற்கான முழுமையான தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பை வடிவமைக்க இபிஎஃப்ஓ தற்பொழுது டெண்டர் கோரியுள்ளது.
பிரதமரின் ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா போன்ற திட்டங்களில் அரசு தனது பங்களிப்பை வழங்குவது போலன்றி, இந்த புதிய பிஎஃப் திட்டம் முற்றிலும் பயனர்களின் சொந்தப் பணத்தை சார்ந்த திட்டமாக மட்டுமே செயல்படும்.
சிங்கப்பூர் நாட்டின் ஓய்வூதிய சேமிப்பு மாதிரிகள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகளை ஆராய்ந்து, இறுதி ஒப்புதல் பெற்ற பின்னரே இந்தத் திட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.