LOADING...
பிஎப் பணத்தை எடுக்க முடியவில்லையா? பழைய கணக்குகளை இணைக்க வருகிறது E-Praapti! புதிய வசதிகள் இதோ
செயலிழந்த பிஎஃப் கணக்குகளை மீட்க ஈபிஎஃப்ஓவின் புதிய போர்டல்

பிஎப் பணத்தை எடுக்க முடியவில்லையா? பழைய கணக்குகளை இணைக்க வருகிறது E-Praapti! புதிய வசதிகள் இதோ

எழுதியவர் Sekar Chinnappan
Apr 30, 2026
12:51 pm

செய்தி முன்னோட்டம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), பிஎஃப் (PF) சந்தாதாரர்கள் தங்களது பழைய மற்றும் நீண்ட நாட்களாகச் செயலிழந்து கிடக்கும் கணக்குகளைக் கண்காணித்து மீண்டும் செயல்படுத்துவதற்காக 'இ-ப்ராப்தி' (E-Praapti) என்ற புதிய இணையதளத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இந்தத் தகவலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார். ஆதார் அடிப்படையிலான அடையாளச் சரிபார்ப்பு முறையின் மூலம் இந்த இணையதளம் செயல்படும் என்பதால், இது மிகவும் பாதுகாப்பானதாகவும் நம்பகத்தன்மை கொண்டதாகவும் அமையும். பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் சந்திக்கும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக ஈபிஎஃப்ஓ அவ்வப்போது தனது சேவைகளைப் புதுப்பித்து வருவதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யுஏஎன்

யுஏஎன் உடன் இணைக்கப்படாத கணக்குகளுக்கான தீர்வு

வேலையை விட்டு வெளியேறிய பிறகு தொடர்ந்து 36 மாதங்களுக்குப் புதிய பங்களிப்புகள் எதுவும் செலுத்தப்படாமல் இருந்தால் அல்லது பழைய நிறுவனத்தின் பிஎப் கணக்கு தற்போதைய யுஏஎன் (UAN) உடன் இணைக்கப்படாமல் இருந்தால் அந்தக் கணக்கு செயலிழந்ததாகக் கருதப்படும். இ-ப்ராப்தி போர்டல் மூலம், யுஏஎன் உடன் இணைக்கப்படாத பழைய ஈபிஎஃப்ஓ கணக்குகளைச் சந்தாதாரர்கள் மிக எளிதாக அணுக முடியும். இத்தகைய கணக்குகள் யுஏஎன் உடன் இணைக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்ட பிறகு, உறுப்பினர்கள் தங்களது சுயவிவரங்களை (Profile) அப்டேட் செய்துகொள்ளும் வசதியும் வழங்கப்பட உள்ளது. ஈபிஎஃப்ஓ நிறுவனம் 2014 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஊழியருக்கும் 12 இலக்க தனித்துவமான யுஏஎன் எண்ணை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

போரட்டலின் செயல்பாடுகள்

இ-ப்ராப்தி போர்டலின் விரிவாக்கம் மற்றும் செயல்பாடுகள்

"இ-ப்ராப்தி" என்பது "செயலிழந்த கணக்குகளைக் கண்காணிப்பதற்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆதார் அடிப்படையிலான அணுகல் போர்டல்" என்பதைக் குறிக்கிறது. தொடக்கத்தில், பாதுகாப்பான மற்றும் திறமையான அமலாக்கத்தை உறுதி செய்வதற்காக உறுப்பினர் ஐடி (Member ID) அடிப்படையில் இந்த இணையதளம் செயல்படும். வருங்காலத்தில் தங்களது பழைய பிஎஃப் கணக்கு விவரங்களை மறந்துவிட்ட உறுப்பினர்களும் இதைப் பயன்படுத்தும் வகையில் இதன் நோக்கம் விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த புதிய தளம் காகிதப் பணிகளைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், ஆவணங்களின் தேவையையும் வெகுவாகக் குறைத்து, பிஎஃப் தொடர்பான பணிகளில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

புள்ளிவிவரங்கள்

ஈபிஎஃப்ஓ சாதனைகள் மற்றும் தானியங்கி தீர்வு புள்ளிவிவரங்கள்

ஈபிஎஃப்ஓ நிறுவனம் 2025-26 ஆம் ஆண்டில் 83.1 மில்லியன் க்ளைம்களை (Claims) தீர்த்து வைத்துப் புதிய சாதனை படைத்துள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா குறிப்பிட்டுள்ளார். இதில் 55.1 மில்லியன் க்ளைம்கள் பிஎப் தொகையைப் பகுதியாகத் திரும்பப் பெறுவதற்காகச் செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, 71.11 சதவீத பகுதியளவுத் திரும்பப் பெறும் கோரிக்கைகள் மூன்று நாட்களுக்குள் தானியங்கி முறையில் (Automatically) தீர்வு செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டின் 59.19 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் மிகப்பெரிய வளர்ச்சியாகும். மேலும், 66.8 மில்லியன் உறுப்பினர்கள் செக் (Cheque) பதிவேற்றம் செய்யாமலேயே க்ளைம்களைத் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement