El Nino எதிரொலி: பால், பருப்பு மற்றும் காய்கறி விலை மீண்டும் உயர்கிறதா?
செய்தி முன்னோட்டம்
பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் ஒரு வானிலை மாற்றம், நீங்கள் காலையில் குடிக்கும் ஒரு கப் தேநீரின் விலையை உயர்த்த முடியுமா? கேட்க விசித்திரமாக இருந்தாலும், அதுதான் உண்மை. பசிபிக் பெருங்கடலில் தீவிரமடைந்து வரும் எல் நினோ காலநிலை மாற்றம் இந்தியாவின் பருவமழையைப் பாதித்து, தீவனத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, பால் உற்பத்தியைக் குறைக்கக்கூடும் என்பதால் வரும் வாரங்களில் பால் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மழைப்பொழிவு குறைவாக இருந்தால், ஜூலை மாதத்திற்குள் பால் விலை மேலும் 3 முதல் 4 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த விலை உயர்வு பாலுடன் நின்றுவிடாமல் பருப்பு, காய்கறிகள் மற்றும் சமையல் எண்ணெய் என ஒட்டுமொத்த மளிகைப் பொருட்களின் விலையையும் உயர்த்தக்கூடும்.
விலை உயர்வு
பால் விலை மீண்டும் உயர்வது ஏன்?
கடந்த மே மாதத்தில்தான் அமுல், மதர் டெய்ரி மற்றும் பராக் மில்க் ஃபுட்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் பால் விலையை 2-3 சதவீதம் வரை உயர்த்தின. தற்பொழுது எல் நினோவால் மீண்டும் விலை உயர வாய்ப்புள்ளது. போதிய பருவமழை இல்லையெனில் கால்நடைகளுக்கான பசுந்தீவனம், பயிர் எச்சங்கள் மற்றும் குடிநீர் இருப்பு பெருமளவில் குறையும். தீவனத் தட்டுப்பாட்டால் அதன் விலை உயரும் போது, விவசாயிகளுக்குக் கால்நடைகளைப் பராமரிக்கும் செலவு அதிகரிக்கும். இதனால் பால் உற்பத்தி குறைந்து, சந்தையில் பாலின் விலை மற்றும் அது சார்ந்த தயிர், பன்னீர், நெய், வெண்ணெய் ஆகியவற்றின் விலை உயரும்.
விலைவாசி
'சூப்பர் எல் நினோ': ஆபத்தில் உள்ள மற்ற உணவுப் பொருட்கள்
இந்தியாவின் ஊரக பொருளாதாரம் மற்றும் விவசாயத் துறை தற்பொழுது எல் நினோவின் நேரடி பார்வையில் உள்ளதாக PwC India அமைப்பின் விவசாயப் பிரிவு வல்லுநர் சசி காந்த் சிங் எச்சரித்துள்ளார். இது காரிஃப் பருவத்தை மட்டுமின்றி, குளிர்கால ரபி பயிர்களையும் பாதிக்கலாம். போதிய மழையின்மையால் துவரம்பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்படக் கூடிய அதிக ஆபத்து உள்ளது. சோயாபீன் போன்ற எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி குறைந்தால், இந்தியா இறக்குமதியைச் சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு சமையல் எண்ணெய் விலை உயரும். தக்காளி உள்ளிட்ட காய்கறிப் பயிர்கள் பருவமழை பொய்க்கும் போது உடனடி விநியோகத் தட்டுப்பாட்டைச் சந்தித்து, சில்லறை விற்பனையில் விலை உச்சத்தைத் தொடும்.
உணவு பயிர்கள்
அரிசி, கோதுமை விலை உயருமா?
மளிகை பொருட்களின் விலை உயர்ந்தாலும், இந்தியாவின் முக்கிய உணவுப் பயிர்களான அரிசி மற்றும் கோதுமையின் விலை உடனடியாக உயர வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் ஆறுதல் தெரிவித்துள்ளனர். கடந்த கால எல் நினோ பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது, இம்முறை இந்தியாவிடம் போதிய அளவிலான உணவு தானிய இருப்பு உள்ளது. இந்தியாவின் முக்கிய நீர் தேக்கங்களில் தற்பொழுது போதிய நீர் இருப்பு இருப்பதாலும், மேம்பட்ட பாசன வசதிகள் இருப்பதாலும் நெல், கோதுமை பயிர்கள் தப்பித்துக் கொள்ளும். இருப்பினும், பருவமழை மிக நீண்ட காலத்திற்கு பொய்த்து போனால் மட்டுமே அரிசி, கோதுமை விலையில் மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகும்.