இறந்த பிறகும் வருமான வரி கட்ட வேண்டுமா? வாரிசுதாரர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான வரி விதிகள்
செய்தி முன்னோட்டம்
ஒருவர் இறந்துவிட்டால் அவரது வருமான வரி சார்ந்த விவகாரங்கள் தானாகவே முடிவுக்கு வந்துவிடாது. அவர் மறைந்த நிதியாண்டில் ஈட்டிய வருமானத்திற்கு வரி தாக்கல் செய்வதும், நிலுவையில் உள்ள வரிகளை செலுத்துவதும் சட்டப்பூர்வ வாரிசுதாரர்களின் கடமையாகும். இருப்பினும், மறைந்தவர் விட்டுச் சென்ற சொத்துக்கள் மற்றும் நிதியில் இருந்து மட்டுமே இந்த வரிகளை செலுத்த முடியும். வாரிசுதாரர்கள் தங்களின் சொந்தப் பணத்தில் இருந்து இந்த வரியை செலுத்த வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாரிசு நடைமுறை
வாரிசுதாரராகப் பதிவு செய்யும் நடைமுறைகள்
வரித் தாக்கல் செய்ய விரும்புபவர் வருமான வரித் துறையின் மின் ஆளுமை இணையதளத்தில் தன்னை சட்டப்பூர்வ வாரிசுதாரராக முதலில் பதிவு செய்ய வேண்டும்.
இதற்காக மறைந்தவரின் இறப்புச் சான்றிதழ், இருவரின் பான் கார்டு எண்கள், உயில் அல்லது வாரிசு சான்றிதழ் மற்றும் பிரமாணப் பத்திரம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
வருமான வரி மதிப்பீட்டு அதிகாரி இந்தப் பதிவை அங்கீகரித்த பின்னரே, வாரிசுதாரரால் மறைந்தவரின் கணக்கில் இருந்து ஆன்லைனில் வரித் தாக்கல் செய்யவோ அல்லது அறிவிப்புகளுக்குப் பதிலளிக்கவோ முடியும்.
வருமான வரி கணக்கீடு
வருமானக் கணக்கீடு மற்றும் வரி அறிவிப்புகளைக் கையாளுதல்
இறந்தவரின் படிவம் 26AS, AIS, TIS மற்றும் வங்கி அறிக்கைகளை சரிபார்த்து நிதியாண்டின் தொடக்கம் முதல் அவர் இறந்த நாள் வரையிலான வருமானத்தை மட்டுமே கணக்கிட வேண்டும்.
அவர் மறைந்த பிறகு கிடைத்த வருமானத்தை அவரது கணக்கில் சேர்க்கக் கூடாது.
அதேபோல, இறந்தவர் பெயரில் புதிதாக அனுப்பப்படும் வரி அறிவிப்புகள் செல்லாது.
ஆனால் அவர் உயிருடன் இருந்தபோது தொடங்கப்பட்ட வரி விசாரணைகள் மற்றும் அறிவிப்புகளுக்கு வாரிசுதாரர் உரிய நேரத்தில் ஆவணங்களுடன் பதிலளிக்க வேண்டும்.
எச்சரிக்கை
வாரிசுதாரர்கள் செய்யக்கூடாத தவறு மற்றும் எச்சரிக்கைகள்
வருமான வரி நிலுவைகள் முழுமையாக செலுத்தப்படும் வரை, மறைந்தவரின் சொத்துக்களை வாரிசுதாரர்கள் விற்பனை செய்யவோ, அடமானம் வைக்கவோ அல்லது பிரித்துக் கொள்ளவோ கூடாது.
வரி நிலுவை இருக்கும்போது சொத்துக்களை அவசரமாகப் பிரித்துக் கொண்டால், வாரிசுதாரர்கள் மீது தனிப்பட்ட முறையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
எனவே, அனைத்து வரி நிலுவைகளையும் முழுமையாக செலுத்தி முடித்த பின்னரே மறைந்தவரின் சொத்துக்களை வாரிசுதாரர்கள் தங்களுக்குள் சட்டப்பூர்வமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என நிதி நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.