பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பு - 100 மில்லியன் டாலரை நிதி வழங்கி உதவிய அமெரிக்கா
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு பருவக்கால மழை காரணமாக பெரு வெள்ளம் ஏற்பட்டு பல சேதங்களை ஏற்படுத்தியது. முறையே, பாலங்கள், சாலைகள் துண்டிக்கப்பட்ட நிலையிலும் நீரில் அடித்துச்செல்லப்பட்டது. 3.3 கோடி பேர் நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் வெள்ளப்பாதிப்பால் காயமடைந்தனர். இந்த இக்கட்டான சூழலில் பாகிஸ்தான் உலகநாடுகளின் உதவியை எதிர்பார்த்தது. இதனையடுத்து, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரியான பிலாவல் பூட்டோ சர்தாரி, அமெரிக்க நாட்டின் வெளியுறவு மந்திரி அந்தோணி பிலிங்கனை அமெரிக்க வாஷிங்டன் நகரில் சந்தித்து நிதி உதவி அடிப்படையில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு பின்னர், முதல்கட்டமாக வெள்ள நிவாரண மற்றும் மனிதநேய அடிப்படையில் அமெரிக்கா பாகிஸ்தானிற்கு நிதியை ஒதுக்கியது.
வெள்ளத்தில் 1739க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - வெள்ளத்திற்கு பிறகு பல்வேறு நோயால் பாதிக்கப்பட்ட மக்கள்
பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் கிட்டத்தட்ட 1,739க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெள்ளத்திற்கு பின்னர் பல நோய் பாதிப்புகள் அங்கு ஏற்பட்டுள்ளது. அதன்படி, 1.34லட்சம் பேர் வயிற்று போக்காலும், 44 ஆயிரம் பேர் மலேரியா வியாதியாலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தோல் வியாதியாலும், 101 பேர் பாம்பு கடியாலும், மேலும் 500 பேர் நாய் கடியாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் அமெரிக்கா மேலும் 100 மில்லியன் டாலரை உணவு பாதுகாப்பு உதவி தொகையாக ஒதுக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.