புதிதாக 200 பணியாளர்களை பணிநீக்கம் செய்யவிருக்கும் உபர் நிறுவனம்
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த உபர்(Uber) நிறுவனமானது தங்களது பணியமர்த்தல் பிரிவில் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறது. இது அந்நிறுவனத்தின் பணியமர்த்தல் பிரிவில் வேலை பார்த்து வரும் ஊழியர்களில் 35% ஆகும். இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்களுடைய சரக்கு சேவைப் பிரிவில் 150 ஊழியர்களை உபர் நிறுவனம் பணிநீக்கம் செய்ததுடன், இந்த ஆண்டு மட்டும் தங்களுடைய 32,700 பணியாளர் எண்ணிக்கையில் 1% ஊழியர்களைப் பணிநீக்கம் செய்திருக்கிறது. இந்த 2023-ம் ஆண்டு முடிவுக்குள் லாபகரமான நிறுவனமாக தங்கள் நிறுவனம் மாறும் என்று உபர் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உபரின் முந்தைய பணிநீக்க நடவடிக்கைகள்:
கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கிய பிறகு தங்களுடைய ஊழியர்களில் 17% பேரை இது வரை உபர் நிறுவனம் பணிநீக்கம் செய்திருக்கிறது. 2020-ம் ஆண்டு, முதன் முதலாக 3,500 ஊழியர்களை ஜூம் கால் மூலமாகவே பணிநீக்கம் செய்தது அந்நிறுவனம். அதனைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு மே மாதம், மேலும் 3,000 ஊழியர்களைப் அந்நிறுவனம் பணிநீக்கம் செய்தது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் ஒரு நாளுக்கு சராசரியாக 24 மில்லியன் கேப் முன்பதிவுகளைப் உபர் நிறுவனம் பெற்றிருக்கிறது. இது கடந்த ஆண்டின் கடைசி காலாண்டை விட 5% அதிகமாகும். மேலும், அடுத்த காலாண்டில் ஒட்டுமொத்தமாக 34 பில்லியன் மதிப்புடைய முன்பதிவுகள் பதிவாகும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.