மத்திய கிழக்கு நோக்கி இரண்டாவது போர் கப்பலை அனுப்பினார் டிரம்ப்; ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கு பகிரங்க அழைப்பு
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது அந்த நாட்டிற்கு நடக்கும் மிகச்சிறந்த விஷயமாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். 47 ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை மட்டுமே நடப்பதாகவும், ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் அவர் சாடியுள்ளார். ஈரானின் தற்போதைய பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் உள்நாட்டுப் போராட்டங்களைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், இந்தப் பிரச்சனைகளுக்கு ஒருமுறை முற்றுப்புள்ளி வைப்பது நல்லது என்று கூறியுள்ளார்.
போர்க்கப்பல்
இரண்டாவது விமானம் தாங்கிப் போர் கப்பல் வருகை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் என்ற போர் கப்பல் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கிப் போர் கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டு அங்கே அனுப்பப்படுவதை டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படாத பட்சத்தில், ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த கூடுதல் பலம் தேவைப்படும் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் கைது செய்த பிறகு, கரீபியன் பகுதியில் இருந்து இந்த போர் கப்பல் தற்போது ஈரான் பகுதிக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.
முட்டுக்கட்டை
அணுசக்தி பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை
ஈரானின் அணுசக்தித் திட்டங்களைக் கட்டுப்படுத்த ஓமன் நாட்டில் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால், ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்கள் மற்றும் பிராந்தியத்தில் அதன் ஆதரவு அமைப்புகள் குறித்துப் பேச ஈரான் மறுத்துவிட்டது. ஈரான் ஒரு மாதத்திற்குள் முறையான ஒப்பந்தத்திற்கு வர வேண்டும், இல்லையெனில் அதன் விளைவுகள் மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மீதான அவநம்பிக்கையே இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடையக் காரணம் என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
போர்
போருக்கான ஆயத்தமா?
ஈரான் மீது கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களால் ஈரானின் அணுசக்தி மையங்கள் ஏற்கனவே சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இரண்டு மெகா போர் கப்பல்கள் ஒரே இடத்தில் குவிக்கப்படுவது, ஈரான் மீதான ஒரு மிகப்பெரிய ராணுவ நடவடிக்கைக்கு டிரம்ப் தயாராகி வருவதையே காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் டிரம்ப் நடத்திய ரகசிய சந்திப்பிற்குப் பிறகு இந்த நகர்வுகள் வேகம் எடுத்துள்ளன.