மெட்ரோவில் இருந்து திரையரங்குகள் வரை: பாரிஸ் நகரத்தை வாட்டி வதைக்கும் மூட்டை பூச்சிகள்
2024 ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில், அந்த போட்டிகள் நடைபெற இருக்கும் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மூட்டை பூச்சிகள் தொந்தரவு அதிகரித்துள்ளது. கடந்த கோடை காலத்தில் பாரிஸ் நகரம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள் மற்றும் வாடகை குடியிருப்புகளில் மூட்டை பூச்சிகள் அதிகமாக காணப்பட்டன. அதன் பிறகு, பாரிஸில் உள்ள திரையரங்களில் மூட்டை பூச்சிகள் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது அதிவிரைவு ரயில்கள் மற்றும் பாரிஸ் மெட்ரோக்களில் மூட்டை பூச்சிகள் தொல்லை அதிகரித்திருப்பதாக சமூக ஊடக பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அதிகமான பொதுமக்கள் மூட்டை பூச்சிகளின் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது போன்ற பதிவுகள் வைரலாகி வருகிறது.
பிரான்ஸ் அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள்
அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் கிளமென்ட் பியூன், பொதுப் போக்குவரத்து ஆபரேட்டர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தி, பொதுமக்களை மூட்டை பூச்சி அச்சுறுத்தலில் இருந்து "பாதுகாக்க" உறுதியளித்துள்ளார். 1950களிலேயே பிரான்ஸில் மூட்டை பூச்சி தொந்தரவு அடங்கிவிட்டது. ஆனால், அதிக மக்கள் தொகை காரணமாகவும் அதிக போக்குவரத்து காரணமாகவும் தற்போது மூட்டை பூச்சிகளின் தொந்தரவு அந்நாட்டில் அதிகரித்துள்ளது. இதற்காக பிரத்யேக பணிக்குழுவை உருவாக்குவது, தொற்றுநோய் பரவலை சரிபார்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு பாரிஸ் சிட்டி ஹால் அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை வலியுறுத்தியுள்ளது. பாரிஸின் துணை மேயர் இம்மானுவேல் கிரிகோயர், "ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு இதனால் எந்த அச்சுறுத்தலும் இல்லை" என்றும், இந்த பிரச்சினையைத் தீர்க்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.