நேபாளத்தில் பயங்கர நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு: 160 பேர் பலி, 133 இந்தியர்களைக் காணவில்லை
செய்தி முன்னோட்டம்
திபெத் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக, மத்திய நேபாள மாவட்டங்களான ரசுவா, தாடிங் மற்றும் நுவாகோட் ஆகிய பகுதிகளில் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. போதேகோஷி மற்றும் திரிசூலி ஆறுகளில் சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை குறைந்தது 160 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 133 இந்தியர்கள் உட்பட சுமார் 500 பேரைக் காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாள-சீன எல்லையான ரசுவாகதி சோதனைச் சாவடி பகுதியில் 2 மாடி கட்டிடங்களை மூழ்கடித்தபடி வெள்ளம் சீறிப்பாய்ந்த அதிர்ச்சி வீடியோக்கள் வெளியாகியுள்ளன. சீன எல்லைப் பகுதியான கிராங் மாவட்டத்திலும் 3 பேர் பலியாகியுள்ளனர். இந்தத் திடீர் வெள்ளத்தால் பல பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், ஒரு டஜனுக்கும் மேற்பட்ட நீர்மின் திட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியர்கள்
133 இந்தியர்கள் நிலை என்ன?
கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக சென்ற 59 இந்தியர்கள் உட்பட மொத்தம் 133 இந்திய பயணிகள் இந்த வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளனர்.
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பிற நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்களைத் தேட காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் உதவி எண்களை(+977 985 131 6807, +977 970 910 7500) அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் எனப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்த நிலையில், இந்திய விமானப் படையின் மூலம் 10 டன் எடையுள்ள நிவாரணப் பொருட்கள் மற்றும் மீட்புக் உபகரணங்கள் உடனடியாக நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நேபாள ராணுவம் 12 ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.