துபாய்: உலகின் மிகப்பெரிய ரங்க ராட்டினம் மீண்டும் திறக்கப்படுமா?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, துபாயில் திறக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ரங்க ராட்டினம், திடீரென்று மர்மமான காரணங்களுக்காக கடந்த ஆண்டு மூடப்பட்டது. மூடப்பட்டு பல மாதங்களாகியும் அது மீண்டும் திறக்கப்படவில்லை என்பதால், வணிகர்களும் சுற்றுலா பயணிகளும் அதிருப்தி அடைந்ததுள்ளனர். மிகவும் பிரபலமான ஐன் துபாய்(துபாயின் கண்கள்) என்று அழைக்கப்படும் ரங்க ராட்டினம், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கிளாம்-ஹப்பில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கோடு வடிவமைக்கப்பட்டது. இந்த கிளாம்-ஹப்பில் தான் உலகின் மிக உயரமான கட்டிடமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த ரங்க ராட்டினத்தின் இயக்கம் கடந்த ஆண்டு நிறுத்திவைக்கப்பட்டது. அது எதற்காக நிறுத்திவைக்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.
பதிலளிக்க மறுக்கும் அதிகாரிகள்
"ஐன் துபாய் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும்" என்று மட்டும் ஐன் துபாயின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. "கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை முடிப்பதற்கு நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்." என்றும் கூறப்பட்டிருந்தது. ஒரு மாதத்திற்கு மட்டுமே மூடப்படுவதாக முன்பு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல மாதங்களாகியும் இன்னும் உலகின் மிகப்பெரிய ரங்க ராட்டினம் மீண்டும் திறக்கப்படவில்லை. இதனால், அப்பகுதியில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் வைத்திருக்கும் வணிகர்கள் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இனி அந்த ரங்க ராட்டினம் மீண்டும் திறக்கப்படுமா என்ற சந்தேகமும் பலருக்கு எழுந்துள்ளது. ஆனால், அதிகாரிகள் இதுவரை இதற்கு எந்த பதிலும் தெரிவிக்காமல் இருக்கின்றனர்.