எவரெஸ்ட் பயணிகளுக்கு விஷம் வைத்து ஹெலிகாப்டர் மீட்பு மோசடி; நேபாளத்தில் அதிரடி கைது நடவடிக்கை
செய்தி முன்னோட்டம்
உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டிற்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் உயிருடன் விளையாடும் ஒரு அதிர்ச்சிகரமான இன்சூரன்ஸ் மோசடி தற்போது நேபாளத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மலையேற்ற வழிகாட்டிகள், ஹெலிகாப்டர் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் ஒன்றிணைந்து சுமார் 20 மில்லியன் டாலர் மதிப்பிலான காப்பீட்டுப் பணத்தை சுருட்டத் திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் உணவில் ரகசியமாக நச்சு பொருட்களை கலந்து, அவர்களை அவசர நிலையில் மீட்பது போன்ற நாடகத்தை அரங்கேற்றி, சர்வதேச காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாயை பறித்த இந்தக் கும்பலை நேபாள காவல்துறையினர் தற்போது முடக்கியுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
JUST IN: Mt. Everest guides accused of “poisoning” climbers to trigger helicopter rescues as part of an insurance scam.
— Collin Rugg (@CollinRugg) April 1, 2026
The guides have allegedly been lacing hikers' food and pressuring them into taking expensive rescue helicopter evacuations.
"Guides with the trekking agencies… pic.twitter.com/pd71ARinUt
திட்டமிட்ட சதி
உணவில் விஷம் கலந்து அரங்கேற்றப்பட்ட திட்டமிட்ட சதி
காத்மாண்டு போஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மலையேற்ற வழிகாட்டிகள் சுற்றுலாப் பயணிகளின் உணவில் 'பேக்கிங் சோடா' போன்ற பொருட்களைச் சேர்த்துள்ளனர். இதனை உண்பதால் பயணிகளுக்குத் தீவிரமான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இந்த அறிகுறிகள் உயரமான மலைப்பகுதிகளில் ஏற்படும் 'ஆல்டிட்யூட் சிக்னஸ்' போன்றே இருக்கும் என்பதால், பயணிகள் அச்சமடைந்துள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொள்ளும் வழிகாட்டிகள், பயணிகளை உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மீட்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். உண்மையில் சாதாரண சிகிச்சையில் குணமாகக்கூடிய பாதிப்பை பெரிய உயிராபத்து போல சித்தரித்து இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது.
முறைகேடான வருவாய்
20 மில்லியன் டாலர் மதிப்பிலான முறைகேடான வருவாய்
நேபாள காவல்துறையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவு நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் 32 நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதில் மலையேற்ற நிறுவனங்களின் உரிமையாளர்கள், ஹெலிகாப்டர் இயக்குநர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் அடங்குவர். ஒரு குறிப்பிட்ட நிறுவனம் மேற்கொண்டதாகக் கூறப்படும் 1,248 மீட்பு நடவடிக்கைகளில் 171 சம்பவங்கள் முற்றிலும் போலியானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மட்டுமே அந்த நிறுவனம் 10 மில்லியன் டாலர் லாபம் ஈட்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்து சுமார் 19.69 மில்லியன் டாலர் (சுமார் 160 கோடி ரூபாய்) காப்பீட்டுப் பணத்தை மோசடியாகப் பெற்றுள்ளன.
போலி ஆவணங்கள்
போலி ஆவணங்கள் மற்றும் மருத்துவமனைகளின் கூட்டு
சுற்றுலாப் பயணிகள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட பிறகு, அவர்கள் குறிப்பிட்ட சில மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையற்ற மற்றும் போலியான சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாகக் காட்டி, மிக அதிகப்படியான மருத்துவக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டுள்ளன. இதற்காகப் போலியான மருத்துவச் சான்றிதழ்கள் மற்றும் விமானப் பயண ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த மோசடியில் கிடைக்கும் லாபம் வழிகாட்டிகள் முதல் மருத்துவமனை வரை அனைவருக்கும் பிரித்தளிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, பல சர்வதேச காப்பீட்டு நிறுவனங்கள் நேபாளத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்குக் காப்பீடு வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளன.