மலாவியின் துணை ஜனாதிபதி உட்பட 9 பேர் விமான விபத்தில் பலி
மலாவியின் துணை ஜனாதிபதி டாக்டர் சௌலோஸ் சிலிமா மற்றும் அவரது மனைவி உட்பட 9 பேர் விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் பயணம் செய்த விமானம் சிக்கங்காவா மலைத்தொடரில் விழுந்து நொறுங்கியதால் அவர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இன்றைய தினத்தை தேசிய துக்க தினமாக அறிவித்து ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா உத்தரவிட்டார். இந்த அறிவிப்பு இன்று காலை அமைச்சரவை அலுவலகத்தின் அறிக்கையில் வெளியிடப்பட்டது. "துரதிர்ஷ்டவசமாக, விமானத்தில் இருந்த அனைவரும் விபத்தில் இறந்துவிட்டனர்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. திங்கள்கிழமை காலை மலாவி நாட்டின் தலைநகரான லிலாங்வேயில் இருந்து புறப்பட இராணுவ விமானத்தில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
மலாவியின் துணை ஜனாதிபதி விமான விபத்தில் பலி
காணாமல் போன விமானத்தில் இருந்தவர்கள் உயிரிழப்பு
மலாவி நாட்டின் முன்னாள் அட்டர்னி ஜெனரலின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சிலிமாவும் மற்ற பயணிகளும் சென்றிந்தபோது, அவர்களது விமானம் ராடாரில் இருந்து கீழே விழுந்ததால், இந்த விபத்து ஏற்பட்டது. மோசமான வானிலை காரணமாக, தலைநகருக்கு வடக்கே சுமார் 200 மைல் தொலைவில் உள்ள முசுசு விமான நிலையத்தில் அந்த விமானத்தால் தரையிறங்க முடியவில்லை. இந்நிலையில், அந்த விமானம் திடீரென்று காணாமல் போனது. அந்த விமானம் காணாமல் போனதும் லிலாங்வேக்குத் திரும்பும்படி விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது. 51 வயதான சிலிமா, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கான சாத்தியமான போட்டியாளராக இருப்பார் என்று பேசப்பட்டு வந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.