Page Loader
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: மார்ச் 10க்கு முன் பணயக்கைதிகளை பரிமாற்றம் செய்து போர்நிறுத்தம் செய்ய முடிவு 

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: மார்ச் 10க்கு முன் பணயக்கைதிகளை பரிமாற்றம் செய்து போர்நிறுத்தம் செய்ய முடிவு 

எழுதியவர் Sindhuja SM
Feb 25, 2024
03:55 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாரிஸ் மற்றும் கெய்ரோவிற்கு அனுப்பப்பட்ட இஸ்ரேல் தூதுக்குழு, மாரத்தான் மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு மீண்டும் ஜெருசலேமிற்கு வந்துள்ளது. அந்த தூதுக்குழுவிற்கு மொசாட் தலைவர் டேவிட் பார்னியா மற்றும் ஷின் பெட் இயக்குனர் ரோனென் பார் ஆகியோர் தலைமை தாங்கினர். மார்ச் 10 ஆம் தேதி ரமலான் மாதம் தொடங்குவதற்கு முன்பே இஸ்ரேல்-ஹமாஸ் போரில் போர்நிறுத்தம் செய்ய பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பது மற்றும் இறந்தவர்களின் உடல்களை திருப்பி அனுப்புவது உட்பட இஸ்ரேல் முன்வைத்த அனைத்து ஆலோசனைகளுக்கும் ஹமாஸ் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல்

பட்டினியில் வாடும் பாலஸ்தீனர்கள் 

ஒப்பந்தம் நிறைவேறாத பட்சத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் வசிக்கும் காசாவின் ரஃபா பகுதியில் இஸ்ரேலிய துருப்புக்களின் தரைவழித் தாக்குதலை நெதன்யாகு முடுக்கிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போரின் போது வடக்கு காசாவில் இருந்து இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களுக்கு மறுவாழ்வு அளிக்க இஸ்ரேல் தரப்பும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. நடந்துகொண்டிருக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில், வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள ஒரு குடும்பம், பட்டினியால் வாடும் குழந்தைகளுக்கு உணவளிப்பதற்காக அவர்களது இரண்டு குதிரைகளைக் கொன்றதாக பேசப்படுகிறது. போர் ஆரம்பமானது முதல், மோதலில் சிக்கியவர்களுக்கு உணவு மற்றும் உதவி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 2.2 மில்லியன் நபர்கள் அங்கு பட்டினியால் தத்தளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை(UN) எச்சரித்துள்ளது.