LOADING...
ஹாங்காங் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்வு; மூவர் கைது
ஹாங்காங் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்வு

ஹாங்காங் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்வு; மூவர் கைது

எழுதியவர் Sekar Chinnappan
Nov 28, 2025
08:47 am

செய்தி முன்னோட்டம்

ஹாங்காங்கில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் (Wang Fuk Court) அடுக்குமாடிக் குடியிருப்புக் கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் பலர் காணாமல் போயுள்ளதால், மீட்புப் பணிகள் இரண்டாவது நாளாகத் தொடர்கின்றன. இது 1996ஆம் ஆண்டின் கோவூன் தீ விபத்தைக் (41 பேர் பலி) காட்டிலும் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி, நகரத்தின் சமீபத்திய வரலாற்றில் மிகவும் கொடூரமான விபத்தாக மாறியுள்ளது.

காரணம்

தீ பரவக் காரணமான மூங்கில் சாரம்

32 மாடிகள் கொண்ட ஒரு கோபுரத்தின் வெளிப் பகுதியில் உள்ள மூங்கில் சாரத்தில் (Bamboo Scaffolding) முதலில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பலத்த காற்று காரணமாக, தீ பின்னர் கட்டிடத்திற்குள் பரவி, மேலும் ஆறு கோபுரங்களுக்கும் பரவியது. சுமார் 2,000 குடியிருப்புகள் மற்றும் 4,800 குடியிருப்பாளர்களைக் கொண்ட இந்த வளாகம், முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டு வந்தது. மூங்கில் சாரம் மலிவானது மற்றும் எளிதில் நிறுவக்கூடியது என்பதால் ஹாங்காங்கில் பொதுவானது. ஆனால், இது தீ விபத்தின் போது எளிதில் எரியக்கூடிய தன்மை கொண்டது. பிளாஸ்டிக் வலை மற்றும் தெர்மாகோல் போன்ற பொருட்களும் வேகமாக எரிந்து, தீ பரவலுக்கு உதவியிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

விசாரணை

கைது மற்றும் விசாரணை

தீ விபத்தில் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கட்டுமான நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட மூன்று பேர் மீது கொலைக்குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல்துறை கைது செய்துள்ளது. வெளிப்புறச் சுவர்களில் பயன்படுத்தப்பட்ட சில பொருட்கள் தீ தடுப்பு விதிமுறைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்தக் கட்டுமானத் திட்டம் குறித்து ஹாங்காங்கின் ஊழல் எதிர்ப்பு அமைப்பும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. புதுப்பித்தல் பணி நடைபெறும் அனைத்துக் குடியிருப்பு வளாகங்களிலும் பாதுகாப்புத் தரங்களை உறுதிப்படுத்த ஆய்வுகள் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

Advertisement