முஸ்லிம் குடும்பத்தின் உள்நாட்டு விவகாரம், அஞ்சத் தேவையில்லை! மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைவது குறித்து வங்கதேசம் கருத்து
செய்தி முன்னோட்டம்
சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய மூன்று முக்கிய நாடுகள் இணைந்து புதிதாக உருவாக்கியுள்ள மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சேர்வதில் வங்கதேசத்திற்கு எவ்விதப் பாதுகாப்பு அல்லது தூதரக ரீதியிலான ஆபத்தும் இல்லை என்று வங்கதேச அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணையுமாறு வங்கதேசத்திற்கு முறையான அழைப்பு விடுக்கப்பட்டால், அதனைத் தங்கள் நாடு மிகச் சாதகமான முறையில் பரிசீலிக்கும் என அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் கலிலூர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும்போது திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இருதரப்பு உறவு
சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை மற்றும் இருதரப்பு உறவுகள்
வங்கதேச வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஹுமாயூன் கபீர், டாக்கா நகரில் சவூதி அரேபியத் தூதர் அப்துல்லா ஜாஃபர் பின் அபியாவைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் ஒரு தனித்துவமான வாய்ப்பை நமக்கு வழங்குகிறது.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நமது அனைத்து இருதரப்புப் பங்காளிகளுடனும் மிகவும் நேர்மறையான பாதையில் பயணித்து வருகின்றன" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய கொந்தளிப்பான சர்வதேச அரசியல் சூழலில், ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பு அமைப்போடு இணைவதால் பிற உலக நாடுகளுடனான வங்கதேசத்தின் இருதரப்பு உறவுகள் அல்லது கூட்டுப் பங்களிப்புகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்றும், தங்களின் வெளியுறவுக் கொள்கையை மிகவும் நெகிழ்வுத்தன்மையுடன் சமநிலையோடு கையாள்வோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
உள்விவகாரம்
முஸ்லிம் குடும்பத்தின் உள்விவகாரம் என விளக்கம்
வங்கதேச நாடாளுமன்றத்தில் சுயேச்சை உறுப்பினர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் கலிலூர் ரஹ்மான், "நாங்கள் இந்த பாதுகாப்பு உடன்படிக்கையை மிகவும் நேர்மறையான கண்ணோட்டத்திலேயே அணுகுகிறோம்.
இது எங்கள் முஸ்லிம் குடும்பத்தின் உள்நாட்டு விவகாரம்.
எனவே, இதில் வெளிநாடுகளோ அல்லது பிற அமைப்புகளோ கவலைப்படுவதற்கோ அல்லது தலையிடுவதற்கோ எந்தவிதமான இடமும் இல்லை" என்று காரசாரமாக பதிலளித்தார்.
வெளியுறவுக் கொள்கை
அடிமைத்தனமான வெளியுறவுக் கொள்கைக்கு முடிவு
பிரதமர் தாரிக் ரஹ்மானின் வலுவான மற்றும் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையின் காரணமாகவே வங்கதேசம் இன்று சர்வதேச அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதாக சுட்டிக்காட்டிய அவர், "வங்கதேசம் இனி ஒருபோதும் யாருக்கும் தலைவணங்காது.
கடந்த காலத்தில் பின்பற்றப்பட்ட அடிமைத்தனமான வெளியுறவுக் கொள்கையை நாங்கள் முற்றிலுமாகப் புதைத்துவிட்டோம்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
மேலும், சவுதி அரேபியாவின் ஜெத்தா நகருக்குச் சென்றிருந்த போது சவூதி வெளியுறவுத் துறை அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான் அல் சவூத் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைகளில் இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து விரிவாகப் பேசப்பட்டதாகவும், அதற்கான பதில்கள் மிகவும் சாதகமாக அமைந்ததாகவும் வங்கதேச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்கா ஒப்பந்தம்
மெக்கா உச்சி மாநாடு மற்றும் ஒப்பந்தத்தின் தோற்றம்
மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போர் அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில், கடந்த ஆகஸ்ட் 7 அன்று சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள அல்-சஃபா அரண்மனையில் கூட்டுப் பாதுகாப்பிற்கான மெக்கா அல்-முகர்ரமா உச்சி மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டின் முடிவில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் துருக்கி அதிபர் ரசிப் தாயிப் எர்டோகன் ஆகியோர் இணைந்து இந்த மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.