உஸ்மான் ஹாதி கொலை வழக்கு: துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அடையாளம் காணப்பட்டது
செய்தி முன்னோட்டம்
பங்களாதேஷின் 'இன்குலாப் மஞ்ச்' (Inqilab Mancha) அமைப்பின் செய்தித் தொடர்பாளரும், இளம் தலைவர் மற்றும் ஆர்வலருமான ஷெரீப் உஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கொலையாளியை அடையாளம் கண்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் அறிவித்துள்ளனர். உஸ்மான் ஹாதியை துப்பாக்கியால் சுட்ட நபர் பைசல் கரீம் மசூத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரே இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் உள்ள முக்கிய நபர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி மசூத் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதை தடுக்க, அவருக்கு எதிராக பயணத் தடையை விதித்து டாக்கா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மசூத் மற்றும் அவருடன் தொடர்புடைய இதர குற்றவாளிகளுக்கு எதிராக நாடு முழுவதும் 'லுக்-அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் வங்கதேசத்திற்குள்ளேயே அடிக்கடி இடத்தை மாற்றித் தலைமறைவாக இருப்பதாக கருதப்படுகிறது.
பின்னணி
ஹாதி மரணத்திற்கு பின் பங்களாதேஷில் கொந்தளிப்பு
டிசம்பர் 12-ஆம் தேதி டாக்காவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் உஸ்மான் ஹாதி தலையில் சுடப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிங்கப்பூருக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 32 வயதான ஹாதி, கடந்த ஆண்டு நடந்த மாணவர் புரட்சியில் முக்கிய பங்காற்றியவர் மற்றும் வரவிருக்கும் பொது தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்தவர். இவரது மரணம் வங்கதேசத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி மாணவர் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் நாடு தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.