"நாளுக்கு நாள் குணமடைந்து வருகிறேன்": மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் ஸ்ரேயாஸ் ஐயர் வெளியிட்ட முதல் அப்டேட்
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது மண்ணீரலில்(Spleen) ஏற்பட்ட பயங்கரமான காயம் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது தனது உடல்நிலை குறித்து முதல் தகவலை வெளியிட்டுள்ளார். காயம் குறித்து ரசிகர்கள் அனுப்பிய ஆதரவுச் செய்திகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஸ்ரேயாஸ் ஐயர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். "நான் தற்போது குணமடையும் நிலையில் உள்ளேன், ஒவ்வொரு நாளும் முன்பை விடச் சிறப்பாக ஆகி வருகிறேன். எனக்குக் கிடைத்த அனைத்து அன்பான வாழ்த்துக்களுக்கும் ஆதரவுக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் -இது எனக்கு உண்மையிலேயே பெரிய விஷயம். நீங்கள் என் மீது வைத்துள்ள அக்கறைக்கு நன்றி." என அவரது பதிவு தெரிவித்தது.
விவரங்கள்
காயம் குறித்த விவரங்கள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், அலெக்ஸ் கேரியின் கேட்ச்சை பிடித்தபோது, அவர் இடது பக்க விலா எலும்புப் பகுதியில் பலமாக விழுந்து காயம் அடைந்தார். மருத்துவப் பரிசோதனைகளில் அவருக்கு மண்ணீரலில் (Spleen) கிழிசல் ஏற்பட்டிருப்பதும், அதன் விளைவாக உள் இரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. உள் இரத்தக்கசிவு காரணமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்திருந்தது. எனினும், பிசிசிஐ மருத்துவக் குழுவின் உடனடி நடவடிக்கையால் அவர் அபாயத்திலிருந்து மீட்கப்பட்டார். உள் இரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதால், ஷ்ரேயஸ் ஐயர் இன்னும் சில நாட்களுக்கு, அதாவது குறைந்தது ஒரு வாரம் சிட்னி மருத்துவமனையிலேயே மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும்.