ஐபிஎல் 2026: ரோஹித் ஷர்மா செய்த மிகப்பெரிய தவறு! கையை விட்டு நழுவிய கேட்ச்; வைரலாகும் வீடியோ
செய்தி முன்னோட்டம்
மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான ஐபிஎல் 2026 லீக் ஆட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான அதேசமயம் அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்தது. மும்பை அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் ஷர்மா, ஒரு எளிதான கேட்ச்சை தவறாகக் கணித்து நழுவவிட்டதுடன், அது பவுண்டரியாக மாறவும் காரணமானார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரகுவன்ஷி
ரகுவன்ஷிக்கு உயிர் கொடுத்த ரோஹித்
கொல்கத்தா இன்னிங்ஸின் 15வது ஓவரை ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அலாக் கசன்ஃபர் வீசினார். அந்த ஓவரில் அதிரடி வீரர் அங்க்ரிஷ் ரகுவன்ஷி ஒரு பெரிய சிக்ஸருக்கு முயன்றார், ஆனால் பந்து பேட்டில் சரியாகப் படாமல் லாங்-ஆன் திசையில் உயரே சென்றது. அங்கு பீல்டிங் நின்று கொண்டிருந்த ரோஹித் ஷர்மா, பந்தை மிக எளிதாகப் பிடித்துவிடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், பந்து வரும் திசையைத் தவறாகக் கணித்த அவர், எல்லையை ஒட்டி நின்றதால் பந்து அவரது கையைத் தாண்டிச் சென்று பவுண்டரி எல்லைக் கோட்டைத் தொட்டது.
இமாலய இலக்கு
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சிய ரகுவன்ஷி
இந்தத் தவறான பீல்டிங்கினால் ரகுவன்ஷிக்கு ஒரு புதிய வாய்ப்பு கிடைத்தது. கேட்ச்சை நழுவவிட்ட விரக்தியில் ரோஹித் சர்மா தலையைக் குனிந்தபடி நின்றார். ஆனால், அடுத்த பந்திலேயே ரகுவன்ஷி நேராக ஒரு சிக்ஸரை விளாசி மும்பை அணியைச் சோதித்தார். ரோஹித் விட்ட அந்த ஒரு கேட்ச், கொல்கத்தா அணி 220 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்ட மிக முக்கியக் காரணமாக அமைந்தது. பீல்டிங்கில் கோட்டை விட்டாலும், பின்னர் பேட்டிங்கில் ரோஹித் அதிரடி காட்டியது ரசிகர்களுக்குச் சற்று ஆறுதலாக அமைந்தது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Rohit Sharma Dropped Catch of Raghuvanshi At Crucial Moment of the game #Rohitsharma #ipl2026 #MIVSKKR pic.twitter.com/OltvayDQSQ
— Tushar Thakar (@iamtthakar) March 29, 2026
வரலாறு
19 ஐபிஎல் சீசன்களில் விளையாடி வரலாறு படைத்த ரோஹித்
கேட்ச்சை தவறவிட்டாலும், இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். ஐபிஎல் தொடரின் அனைத்து 19 சீசன்களிலும் (2008 முதல் 2026 வரை) விளையாடிய முதல் இந்திய சர்வதேச வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் தனது பயணத்தைத் தொடங்கி, மும்பை இந்தியன்ஸ் அணியை ஐந்து முறை சாம்பியனாக்கிய ரோஹித், எம்எஸ் தோனியுடன் இணைந்து ஐபிஎல் வரலாற்றின் மிக வெற்றிகரமான கேப்டனாகத் திகழ்கிறார். இதற்கிடையே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்று 14 ஆண்டுகளில் முதல்முறையாக ஐபிஎல் சீசன்களில் தனது தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.