இந்தியாவின் 94வது கிராண்டு மாஸ்டரானார் அசாமைச் சேர்ந்த மயங்க் சக்கரவர்த்தி
செய்தி முன்னோட்டம்
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது இளம் வீரர் மயங்க் சக்ரவர்த்தி, இந்தியாவின் 94-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் (Grandmaster) அந்தஸ்தைப் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் வடகிழக்கு இந்தியாவிலிருந்து கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். ஸ்வீடனில் நடைபெற்ற 8-வது ஜிஎம் (GM) செஸ் தொடரில் மயங்க் இந்த மைல்கல்லை எட்டினார். இத்தொடரில் 9 சுற்றுகளில் 7 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்தார். எட்டாவது சுற்றில் ஸ்வீடனின் பிலிப் லிண்ட்கிரேனைத் தோற்கடித்ததன் மூலம், ஒரு சுற்று மீதமிருக்கும் போதே தனது மூன்றாவது மற்றும் இறுதி ஜிஎம் நார்மை அவர் உறுதி செய்தார்.
செஸ்
கடின உழைப்பால் சாதனை
கிராண்ட்மாஸ்டர் பட்டத்திற்குத் தேவையான 2500 ஈலோ (ELO) ரேட்டிங் புள்ளிகளையும் அவர் கடந்துள்ளார். கௌஹாத்தியைச் சேர்ந்த மயங்க், 2019-ல் தேசிய 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர். வடகிழக்கு பிராந்தியத்தில் செஸ் விளையாட்டுக்கான போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையிலும், தனது கடின உழைப்பால் இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். கௌஹாத்தி மற்றும் சில்சார் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மயங்கின் இந்த வரலாற்று வெற்றி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது அந்தப் பகுதியில் உள்ள பல இளம் செஸ் வீரர்களுக்கு ஒரு பெரிய உந்துதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.