Loading...
முழுமையாக மொட்டை அடித்து நேர்த்திக்கடன்! திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காதலியுடன் சாமி தரிசனம் செய்த ஹர்திக் பாண்டியா
திருப்பதியில் முடிக் காணிக்கை செலுத்திய ஹர்திக் பாண்டியா

முழுமையாக மொட்டை அடித்து நேர்த்திக்கடன்! திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காதலியுடன் சாமி தரிசனம் செய்த ஹர்திக் பாண்டியா

எழுதியவர் Sekar Chinnappan
Aug 02, 2026
02:13 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு வந்த அவர், பாரம்பரிய வழக்கப்படி தனது தலைமுடியை முழுமையாக முடிக் காணிக்கையாக செலுத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றினார். மொட்டை அடித்த புதிய தோற்றத்தில் அவர் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வைரலாகி வருகின்றன.

சுப்ரபாத சேவை

காதலியுடன் சுப்ரபாத சேவையில் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) அதிகாலையில் திருமலைக்கு சென்ற ஹர்திக் பாண்டியா, திருப்பதியில் மிகவும் சிறப்பு வாய்ந்த சுப்ரபாத சேவையில் (Suprabhatam Seva) கலந்து கொண்டு ஏழுமலையானை வழிபட்டார்.

இந்த ஆன்மீகப் பயணத்தின் போது அவரது காதலி மஹிகா சர்மாவும் உடன் இருந்தார்.

வெள்ளையுடையில் வந்திருந்த இருவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுத் தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கி ஆசிர்வதிக்கப்பட்டது.

இந்திய அணி

இந்திய அணியில் மீண்டும் களம் இறங்கத் தயாரிப்பு

முதுகுப் பகுதி தசைப்பிடிப்பு மற்றும் தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாகப் பாதிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்கள் மற்றும் ஜிம்பாப்வே தொடரில் பங்கேற்கவில்லை.

தற்போது பிசிசிஐயின் மையத்தில் தனது உடல் தகுதியை மீட்டெடுப்பதற்கான தீவிரப் பயிற்சிகளை நிறைவு செய்துள்ளார்.

2027 ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரைக் கருத்தில் கொண்டு, அவரது உடல் தகுதியை மேம்படுத்துவதில் பிசிசிஐ அதிக கவனம் செலுத்தி வருகிறது.

ADVERTISEMENT

இலங்கை டெஸ்ட்

இலங்கை டெஸ்ட் தொடர் மற்றும் எதிர்காலத் திட்டங்கள்

இந்திய கிரிக்கெட் அணி அடுத்து ஷுப்மன் கில் தலைமையில் இலங்கைக்குச் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியும், ஆகஸ்ட் 23 ஆம் தேதி கொழும்பில் இரண்டாவது டெஸ்ட் போட்டியும் தொடங்குகின்றன.

சர்வதேச வெள்ளைப் பந்து போட்டிகளில் மீண்டும் களம் இறங்கத் தயாராகி வரும் வேளையில், ஹர்திக் பாண்டியா மேற்கொண்ட இந்தத் திருப்பதி ஆன்மீகப் பயணம் அவருக்கு ஒரு புதிய தொடக்கமாக அமையும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

ADVERTISEMENT