
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கிரிக்கெட் வீரர்கள் அஞ்சலி
செய்தி முன்னோட்டம்
லார்ட்ஸில் நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியின் 3வது நாளில் (ஜூன் 13), தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்கள் அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர், ஜூன் 12 அன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது, இதில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார்.
இந்த சோகமான தருணத்தில், அனைத்து வீரர்களும் அதிகாரிகளும் கருப்பு கைப்பட்டை அணிந்து, உயிரிழந்த 241 பேரின் நினைவாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இந்த தருணத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டது.
போட்டி நிலவரம்
முன்னிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
உலக டெஸ்ட் டாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நடந்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தங்கள் ஆதிக்கத்தை நீட்டித்து, 250 ரன்களுக்கு மேல் தங்கள் முன்னிலையை அதிகரித்தது.
முன்னதாக, டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில், 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தென்னாப்பிரிக்கா அடுத்து 138 ரன்களுக்கே சுருண்ட நிலையில், ஆஸ்திரேலிய அணி தற்போது இதை எழுதும் நேரத்தில் 9 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களுடன் ஆடி வருகிறது.