டெக் மஹிந்திரா நிறுவனத்தில் 30,000 ஊழியர்கள் பணிநீக்கமா? உண்மை இதுதான்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா, தனது நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக பங்குச் சந்தை அமைப்புகளுக்கு நிறுவனம் இன்று (மார்ச் 9) அளித்துள்ள விளக்கத்தில், அத்தகைய எந்தவொரு திட்டமும் பரிசீலனையில் இல்லை என்று தெரிவித்துள்ளது.
ஏஐ அச்சம்
வைரல் பதிவுகளும் ஏஐ அச்சமும்
சமீபகாலமாக எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் தாக்கத்தால் டெக் மஹிந்திரா சுமார் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கப் போவதாகத் தகவல்கள் பரவின. ஆனால், இந்தத் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றும், இத்தகைய வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து ஏஜென்டிக் ஏஐ தளத்தைத் தொடங்குவதாக டெக் மஹிந்திரா அறிவித்திருந்த நிலையில், இந்த வதந்திகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
ஊழியர்கள்
ஊழியர்களின் எண்ணிக்கை நிலவரம்
டெக் மஹிந்திராவின் சமீபத்திய காலாண்டுத் தரவுகளின்படி, இந்நிறுவனத்தில் உலகளவில் சுமார் 1.5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக நிலையாகவே உள்ளது. புதிய பணிகளுக்காக ஊழியர்களை மறுசீரமைப்பு செய்கிறார்களே தவிர, ஆட்குறைப்பு செய்யவில்லை என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த காலாண்டு முடிவுகளின் போது நிர்வாகம் அளித்த விளக்கத்தில், குறிப்பிட்ட சில புராஜெக்ட்களில் உற்பத்தித் திறனை அதிகரிக்க ஊழியர்களை அந்த இடத்திலிருந்து மாற்றி, புதிய பணிகளில் அமர்த்தி வருவதாகக் கூறியது. இது வழக்கமான ஒரு நடைமுறைதான் என்றும், இதற்கும் பணி நீக்கத்திற்கும் சம்பந்தமில்லை என்றும் கூறியது.