தினமும் 30 ராக்கெட்டுகள், பூமியின் மிகப்பெரிய லான்ச் பேட்! ஸ்பேஸ்எக்ஸ் வெளியிட்ட $100 பில்லியன் பிரம்மாண்ட திட்டம்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் தெற்கு மாநிலமான லூசியானாவில் $100 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பிரம்மாண்டமான புதிய விண்வெளி மையம் அமைக்கப்படும் என எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. நியூ ஆர்லியன்ஸ் நகரிலிருந்து மேற்கே சுமார் 185 கிமீ தொலைவில் உள்ள வெர்மிலியன் பாரிஷ் பகுதியில் இந்த மையம் அமையவுள்ளது. மனித குலத்தைச் செவ்வாய் மற்றும் நிலவிற்கு அனுப்பும் நோக்கத்தோடு உருவாக்கப்படும் ஸ்டார்ஷிப் ராக்கெட்டுகளை ஏவுவதற்கு இந்த மையம் முதன்மையாகப் பயன்படுத்தப்படும்.
ஸ்டார்பேஸ் லூசியானா
ஸ்டார்பேஸ் லூசியானா மற்றும் 3,000 புதிய வேலைவாய்ப்புகள்
ஸ்டார்பேஸ் லூசியானா என பெயரிடப்பட்டுள்ள இந்த மையத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்குகின்றன.
இந்தத் திட்டத்தின் மூலம் அப்பகுதியில் 3,000க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இங்கு பணியாற்றவுள்ள தொழிலாளர்களின் சராசரி ஊதியம், அப்பகுதியின் தற்போதைய சராசரி ஊதியத்தை விட 192 சதவீதம் அதிகமாக இருக்கும் என லூசியானா மாநிலப் பொருளாதார மேம்பாட்டு முகமை உறுதிப்படுத்தியுள்ளது.
மிகப்பெரிய தளம்
நாளில் 30 ராக்கெட்டுகள் ஏவக்கூடிய பூமியின் மிகப்பெரிய தளம்
வருடத்திற்குப் பல்லாயிரக்கணக்கான ஸ்டார்ஷிப் விண்வெளிப் பயணங்களை ஆதரிக்கும் வகையில் இதர உள்கட்டமைப்பு வசதிகளும் இங்கு உருவாக்கப்படும்.
முதல் ராக்கெட் ஏவுதல் 2029 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மையத்தில் 12க்கும் மேற்பட்ட ராக்கெட் ஏவுதளக் கோபுரங்கள் அமைக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ஒரு நாளைக்கு 30க்கும் மேற்பட்ட ஸ்டார்ஷிப் ராக்கெட்டுகளை ஏவ முடியும் என்றும், இதுவே பூமியின் மிகப்பெரிய ராக்கெட் ஏவுதளமாக மாறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சவால்கள்
இயற்கை பாதுகாப்பு மற்றும் சூழலியல் சார்ந்த சவால்கள்
புதிய விண்வெளி தளம் அமையவுள்ள பகுதியில் கடலோரப் பகுதிகளைப் பாதுகாக்கவும், உள்ளூர் வனவிலங்குகளைப் பராமரிக்கவும் தீவிர முயற்சிகள் எடுக்கப்படும் என ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
இருப்பினும், டெக்சாஸில் இயங்கி வரும் தற்போதைய ஸ்பேஸ்எக்ஸ் தளம் இயற்கை பாதுகாப்புப் பகுதிக்கு அருகே அமைந்துள்ளதால், ஏற்கனவே பல சுற்றுச்சூழல் அமைப்புகளின் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.
இந்தச் சூழலில் புதிய பிரம்மாண்ட திட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும் கருத்துகள் எழுந்து வருகின்றன.