ஏஐக்கு கடிவாளம்; மனிதநேயத்தை முன்னிறுத்தும் பிரதமர் மோடியின் MANAV தொலைநோக்கு பார்வையின் முக்கிய அம்சங்கள்
செய்தி முன்னோட்டம்
புதுடெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஏஐ இம்பாக்ட் எக்ஸ்போ 2026 இல் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை உலக நாடுகள் எப்படி அணுக வேண்டும் என்பதற்கான ஒரு புதிய தொலைநோக்கு பார்வையை அறிமுகப்படுத்தினார். அதற்கு அவர் 'MANAV' (மானவ் - மனிதன்) என்று பெயரிட்டுள்ளார். இயந்திரங்களை விட மனிதநேயத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதே இந்த தொலைநோக்குப் பார்வையின் முக்கிய நோக்கமாகும்.
தூண்கள்
MANAV - அந்த 5 முக்கிய தூண்கள்
M - Moral and Ethical Systems: ஏஐ தொழில்நுட்பம் என்பது மனித விழுமியங்கள் மற்றும் அறநெறிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும். A - Accountable Governance: வெளிப்படையான விதிகள் மற்றும் வலுவான கண்காணிப்பு அமைப்பின் கீழ் ஏஐ செயல்பட வேண்டும். N - National Sovereignty: ஒரு நாட்டின் தரவுகள் அந்த நாட்டிற்கே சொந்தமானது. A - Accessible and Inclusive: ஏஐ தொழில்நுட்பம் ஒரு சில நிறுவனங்களின் ஏகபோக உரிமையாக இல்லாமல், ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கும் எளிதாகக் கிடைக்க வேண்டும். V - Valid and Legitimate: அனைத்து ஏஐ அமைப்புகளும் சட்டத்திற்கு உட்பட்டு, நம்பகத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.
கட்டுப்பாடு
மனிதக் கட்டுப்பாட்டில் ஏஐ
பிரதமர் மோடி ஏஐ தொழில்நுட்பத்தை ஒரு ஜிபிஎஸ் கருவியுடன் ஒப்பிட்டுப் பேசினார். "ஜிபிஎஸ் நமக்கு வழியைக் காட்டலாம், ஆனால் எந்த திசையில் செல்ல வேண்டும் என்ற இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் மனிதர்களிடமே இருக்க வேண்டும். ஏஐ ஒரு தீர்வாக இருக்க வேண்டுமே தவிர, மனிதர்களை வெறும் தரவுப் புள்ளிகளாக மாற்றக் கூடாது." என்று அவர் வலியுறுத்தினார்.
உலக நாடுகள்
உலக நாடுகளுக்கு விடுத்த அழைப்பு
டீப்ஃபேக் போன்ற போலி உள்ளடக்கங்கள் சமூகத்தை நிலைகுலையச் செய்யும் அபாயம் உள்ளதாக எச்சரித்த பிரதமர், ஏஐ மூலம் உருவாக்கப்படும் தகவல்களுக்கு அங்கீகார லேபிள்கள் மற்றும் வாட்டர்மார்க்கிங் முறைகளைக் கொண்டு வருவது அவசியம் என்று நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டார். "இந்தியாவில் வடிவமைத்து, உலகிற்காக உருவாக்குங்கள்" என்ற முழக்கத்தையும் அவர் முன்வைத்தார்.