LOADING...
இந்தியக் குழந்தைகளுக்கு அதிக 'ஸ்கிரீன் டைம்'; அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை
அதிக நேரம் திரை பார்க்கும் குழந்தைகள்

இந்தியக் குழந்தைகளுக்கு அதிக 'ஸ்கிரீன் டைம்'; அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை

எழுதியவர் Prasanna
Mar 13, 2026
03:43 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்கு அதிக நேரத்தைத் திரைகள் முன்னால் செலவிடுவதாகப் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட புதிய ஆய்வின்படி, இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு சராசரியாக 2.2 மணி நேரம் செல்போன் அல்லது தொலைக்காட்சித் திரைகளைப் பார்ப்பதாகத் தெரியவந்துள்ளது. இது உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரைத்துள்ள அளவை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

மொபைல்

ஆய்வின் முக்கியத் தகவல்கள்:

2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே 'ஸ்கிரீன் டைம்' இருக்க வேண்டும். ஆனால் தற்போது அது 2.22 மணி நேரமாக உயர்ந்துள்ளது. 2 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்குத் திரைகளைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இவர்கள் சராசரியாக 1.2 மணி நேரத்தைத் திரைகள் முன்னால் செலவிடுகின்றனர். குழந்தைகள் அழும்போதும் அல்லது அவர்களுக்கு உணவூட்டும் போதும் அமைதிப்படுத்தப் பெற்றோர்கள் செல்போன்களைப் பயன்படுத்துவதே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

குழந்தைகள்

ஏற்படும் பாதிப்புகள்:

அதிகப்படியான திரை பயன்பாட்டால் குழந்தைகளுக்குப் பேச்சுத்திறன் குறைபாடு, கவனிக்கும் திறன் குறைதல், தூக்கமின்மை, உடல் பருமன் மற்றும் சமூகத்துடன் பழகுவதில் சிக்கல்கள் ஏற்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வீட்டில் படுக்கையறை மற்றும் உணவு உண்ணும் இடங்களைத் 'தொழில்நுட்பம் இல்லாத இடங்களாக' மாற்ற வேண்டும். குழந்தைகளுக்குப் புத்தகங்கள் வாசிப்பது, வெளி விளையாட்டுகளில் ஈடுபடுத்துவது போன்ற பழக்கங்களை உருவாக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, பெற்றோர்கள் தங்கள் செல்போன் பயன்பாட்டைக் குறைத்துக் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Advertisement